Ayutha Pooja 2024: தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது ஆயுத பூஜை. எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு அவர் செய்யும் தொழிலே பிரதான தெய்வம் ஆகும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் நாம் செய்யும் தொழிலை போற்றி வணங்கி விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.








 

ஆயுத பூஜை கொண்டாட்டம்:

 

நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு காலை முதலே கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

 








மாட்டுத்தாவணி மலர் சந்தை, மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பழச்சந்தையில் விற்பனை ஜோர்

 

இன்று நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கான பொருட்கள் விற்பனை செய்யும் சந்தைகளில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்துவதற்காக பூஜை பொருட்களான வாழைமரக்கன்று, பழங்கள், வாசனை திரவிய பொருட்கள் வாங்கி செல்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பழச்சந்தை , தெற்கு வாசல், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட தினசரி காய்கறி மற்றும் பழச்சந்தைகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு பூஜை பொருட்கள், பொரிகடலை வாசனை திரவியங்கள் பழங்கள் வெற்றிலை பாக்கு பூசணிக்காய் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட பூக்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

 


 

மதுரையில் ஆயுத பூஜையை உற்சாகமாக கொண்டாடிய ஆட்டோ தொழிலாளர்கள்

 

ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியம் மற்றும் ராஜாஜி பூங்கா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆட்டோ தொழிலாளர்கள் தங்களது ஆட்டோக்களை  பூக்கள் மற்றும் சந்தனம் தெளித்து ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி வைத்து ஆட்டோக்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். ஒவ்வொரு ஆட்டோவின் முன்பாகவும் தீபாரதனை காண்பித்து பூஜை செய்யப்பட்ட பின்பாக கடவுளை நினைத்து ஆட்டோவை எடுத்துச் சென்று வரிசையாக ஆட்டோ ஓட்டுநர்கள் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுத பூஜை நடைபெற்ற பின்பாக ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டதோடு, அங்கு கூடியிருந்த பொது மக்களும் ஏழை எளியவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.