காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால்,  தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பொழிவு அதிகரித்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து  கடந்த சில நாட்களுக்கு முன், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கன அடியும், கபினியிலிருந்து வினாடிக்கு 5478 கன அடி என மொத்தம் 7478 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.


 

இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நேற்று முதல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

 

தொடர்ந்து காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து குறைந்த வந்த நிலையில், நேற்று மாலை வினாடிக்கு 7,000 கன அடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 7,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் மெயினருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பகுதியில் நேற்று அதிகபட்சமாக 75 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த தண்ணீர் சின்னாறு வழியாக சென்று ஒகேனக்கல் மீன் மார்க்கெட் அருகில் காவிரி ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும்.

 


 

இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மழை பொழிவு குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7,478 கன அடியிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 2039 கன அடியும், கபினியிலிருந்து வினாடிக்கு 1125 கன என மொத்தம் 3,154 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து, நாளை காலை முதல் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழகத்திற்கு மாதா மாதம் திறக்கப்படும் தண்ணீரை, காவிரி ஆணையத்தின் முறையிட்டு பெற்றால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும். எனவே தமிழக அரசு காவிரி நீரை கேட்டு பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.