தருமபுரி குமரசாமிபேட்டை ஆனந்த நடராஜர் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன விழாவில் 2 டன் பழங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

 

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது.  இந்த திருவிழாவையொட்டி மாணிக்கவாசகர் குருபூஜையும், அதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், மாணிக்கவாசகர் திருவீதி உலாவும் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து திரு நெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியும், நால்வர் திருவீதி உலாவும், அபிஷேகப் பொருட்கள் வரிசை அழைப்பும் நடைபெற்றது.


 



 

 

தொடர்ந்து இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும், புஷ்பாஞ்சலி சேவையும் நடைபெற்றது. பின்னர் கோவில் பந்தலில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு 2 டன் மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகமும், நறுமண பொருட்களால் மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு தங்கக்கவச அலங்காரத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனமும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் ஆலய விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.