தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள 40 மூட்டை குட்கா பொருட்களை சில கடத்தி வந்து, தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் ஒரு குடோனில் பதுக்கி விற்பனை செய்து வருவதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வனுக்கு ரகசிய கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில், அதியமான்கோட்டை காவல் துறையினர், தடங்கம் பகுதியில் சோதனை நடத்தினர். 

 



 

அப்பொழுது ஒரு குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட 40 மூட்டை குட்கா இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குட்காவை கடத்தி வந்து பதுக்கி வைத்த, பிரபாகரன் (வயது 21) அவரது தந்தை நரசிம்மன் மற்றும் மனோஜ் (22) ஆகிய மூவரையும் அதியமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 3 லட்சம் மதிப்பிலான 40 மூட்டை குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் குட்கா கடத்தப்படுவது தொடர் கதையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 



 

அரசு மருத்துவமனைக்கு போர்வை, தலையணைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

 



 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு  படுக்கைகளில் போதிய பெட்ஷீட், பெட்கவர், தலையனை உறை இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் கொரோனா வேகமாக பரவி காலம் என்பதால் அதிக படுக்கையறை வசதிகளை ஏற்படுத்த வேண்டி உள்ளதாலும் நோயாளிகளின் நிலைமையினை கருத்தில் கொண்டு, மாவட்ட அதிமுக சார்பில்,  முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.அன்பழகன், மருத்துவமனைக்குக் தேவையான 500 படுக்கைகள் பெட்ஷிட், பெட்கவர், தலையனை உறை ஆகியவற்றை வாங்கி, அந்தந்த  மருத்துவமனைகளுக்கு தேவையான பொருட்களை, மருத்துவமனை மருத்துவர்களிடம் நேரில் சென்று வழங்கினார்.

 



 

இதேபோல் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், பெல்ரம்பட்டி மருத்துவமனைக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக தருமபுரி மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.