சேலம் மாவட்ட ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கொழுந்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சின்ன சேலத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு பிரபு (32), விஜய் (30) என இரண்டு மகன்கள் உள்ளனர். பிரபுவின் மனைவி மஞ்சு (28) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. விஜய் தனது அண்ணன் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நிலையில் அண்ணி மஞ்சுவோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.


இதனிடையே, விஜய்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் தனது அண்ணியுடன் ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து தங்கியுள்ளார். கடந்த 5-ஆம் தேதி காலை அறை எடுத்துள்ளனர். 6-ஆம் தேதி காலை மஞ்சு குளியலறையில் ஆடைகளின்றி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக விஜய் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.


காவல்துறையினர் வருவதற்கு முன்பு மஞ்சுவின் சடலத்தை மீட்டெடுத்து ஆடை அணிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து விஜயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



காவல்துறையினர் விசாரணையில் மஞ்சு இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், இதுகுறித்து ஏற்காடு வந்தபோது விஜய் விசாரித்த உடன் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விஜய் தன் மீது சந்தேகப்படுவதாக எண்ணி மஞ்சு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் விஜய் கூறியுள்ளார். மஞ்சுவை தற்கொலைக்கு தூண்டியதாக விஜய் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


திருமணத்தை மீறிய உறவால் தனிமையில் தங்கியிருந்த இருவருக்குமிடையே பிரச்னை எழுந்த நிலையில் மஞ்சு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விஜய் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.