விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.  மேலும் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பொதுமக்கள் வீட்டிலே தனித்தனியாக வழிபடவும் அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சிறிய விநாயகர் சிலைகள் முதல் வண்ண வண்ணமாய் பெரிய விநாயகர் சிலைகள் வரை தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனையாகததால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 



 

இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த மூன்று பட்டதாரி இளைஞர்கள் கடந்த 5 ஆண்டுகளாக சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகளை தயாரித்து, அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிலைகளில் வேம்பு, புங்கன் மற்றும் காய்கறிகள், கீரை  உள்ளிட்ட விதைகளை களிமண்ணில் வைத்து, அரை அடி முதல் 2 அடி வரையிலான விநாயகர் சிலைகளை இளைஞர்கள் தயாரித்து வருகின்றனர். இந்த சிலைகள் 140 ரூபாய் முதல் 390 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் ஆன்லைனில் பெறுபவர்களுக்கு தபால் செலவின்றி சிலைகள் அனுப்பப்படுகிறது. 

 


 

இந்த சிலைகள் இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு விநாயகர் சிலைகள் கூரியர் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு காய்கறி மற்றும் கீரை விதைகளையும் இந்த விநாயகர் சிலையில் வைத்து தயாரிக்கின்றனர். நகர் புறங்களில் இடவசதி இல்லாமல் மாடி தோட்டங்கள் அமைப்பதற்கு இது பயனளிக்கும். எந்த விதமான செயற்கை மற்றும் வேதிப் பொருட்களை கலக்காமல், இயற்கையான முறையில் விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. இந்த சிலைகளை பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி கூரியர் மூலம் பெறுகின்றனர்.

 

இந்த சிலைகள் விற்பனைக்காக தனி இணையதளத்தையும் உருவாக்கி உள்ளனர் இந்த பட்டதாரி இளைஞர்கள். இந்த விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது, அதில் உள்ள களிமண் மற்றும் விதைகள் செடிகளாக வளர வழிவகை செய்கிறது. குறிப்பாக தற்போது கொரானா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள பெரிய, பெரிய சிலைகள் விற்பனையாகவில்லை. கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக ஒரு வாரத்திலிருந்து சிலைகள் விற்பனை சூடுபிடிக்கும். ஆனால் கொரோனா தடையால், விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல், தேக்கமடைந்துள்ளது. இதனால் சிலை உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஆனால் எங்களிடம் இல்லங்களில் தனியாக வைத்து வணங்குவதற்காக அதிக அளவிலான சிலைகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடையால் எங்களது உற்பத்தி, விற்பனை பாதிக்கப்படவில்லை. கடந்த காலங்களை விட, சிலைகளின் முன் பதிவும், விற்பனையும் கூடுதலாகவே இருக்கிறது. மேலும் தினமும் கூரியரில் 10 சிலைகள் அனுப்பப்படும். ஆனால் இந்த ஆண்டு தினசரி 30 முதல் 50 சிலைகள் வரை அனுப்பப்படுகிறது.  மேலும் சிலைகளை எடுத்து செல்ல, கூரியர் அலுவலகத்திலிருந்து உற்பத்தி செய்கின்ற இடத்திற்கே வந்து எடுத்து செல்கின்றனர்.

 



 

இந்த சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்து தண்ணீரில் கரைக்கும் போது, மர செடிகள் வளர்ந்து மரங்களாக உருவெடுக்க வழிவகை ஏற்படும்.  அதை இல்லங்களில் தொட்டிகளில் வைத்து கரைத்தால் அந்த தொட்டிகளில் சிலை தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட களிமண் மற்றும் அதில் உள்ள காய்கறி மற்றும் கீரை வகைகள் நல்ல முறையில் வளர்ந்து பயனளிக்கும் என தெரிவிக்கின்றனர். மேலும் இந்தியாவில் கொண்டாடப்படும் அனைத்து திருவிழாக்களும் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்ற நோக்கிலும் இந்த பணிகளை செய்து வருவதாகவும், அந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.