கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் 90 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.ஆனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்ததது. 

 

தொடர்ந்து காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,000 கன அடியாக குறைந்திருந்தது. கர்நாடக மற்றும் தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட மலைப் பகுதியைச் சார்ந்த இடங்களில் கன மழை  பெய்து வருவதால், காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 9,000 கன அடகயிலிருந்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 35,000 கன அடியாக உள்ளது. இன்று ஒரே நாளில் 26,000 கன அடி தண்ணீர் உயர்ந்துள்ளது.



 

இதனால் ஒகேனக்கலில் ஐந்தருவி,மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பிரதான  அருவிக்கு செல்லும் நடைப்பாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத் ஆணைய அதிகாரிகள், தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மழை வெள்ளம் என்பதால், படிப்படியாக நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

 



 

மேலும் கேரளா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கபிணி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பும் தருவாயில் இருந்து வருகிறது. இந்த நீர்வரத்தால், அணைகள் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து, மேலும் அதிகரித்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. தொடர்ந்து ஓரிரு நாட்களில், மீண்டும் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.