விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன கூட்டரங்கில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், நடைபெற்றது.


ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி 


இக்கூட்டத்தில், அமைச்சர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் - ஊரகம், இசேவை சான்றிதழ்கள், பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, சாலை விபத்துக்களுக்கான நிவாரணம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், குடிநீர் விநியோகம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 15-வது ஒன்றிய நிதி குழு - பணி முன்னேற்றம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பாலின விகிதம், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.




மேலும் தாய்மார்கள் இறப்பு, குழந்தைகள் இறப்பு விகிதம், இளம் வயதில் கர்ப்பமடைதல், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மைக் காக்கும் -48, திட்டத்தின் கீழ் 7 முக்கிய அறுவை சிகிச்சைகளின் செயல்திறன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் அங்கன்வாடி உட்கட்டமைப்பு, புதுமைப் பெண் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் உழவர் சந்தைகளின் செயல்பாடுகள், உழவர் உற்பத்தியாளர்கள் குழு செயல்பாடுகள், உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


அதிகாரிகளுக்கு அறிவுரை


மேலும் ஆவின் கூட்டுறவு சங்கங்களின் செயல் திறன், சினை பரிசோதனைகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகள், தாட்கோ, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சாலை பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனடியாகவும், விரைவாகவும் சென்றடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.




நலத்திட்ட உதவிகள்


இதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.14.71 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 17 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழங்கினார்.