தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை பனகல் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கருப்பு கொடி மற்றும் திமுக அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியபடி 200க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

 


சாலையின் இரு புறமும் நின்றபடி, தி.மு.க அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மதுரை மாவட்டத்தில்  அனைத்து வார்டுகளிலும் இதே போன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

 

பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ.....,” பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடையூறு இல்லாத வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. முதல்வர் தேர்தல் வாக்குறுதியை மறந்து இருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பதவி மோகத்தில் மறந்திருந்தாலும், அவருக்கு நினைவூட்டும் வகையில் எதிர்க்கட்சி கடமையாற்றும் வகையில் அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம்



எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் வறுமை தாண்டவம் ஆடியபோது கஞ்சித் தொட்டி திறந்த நடிகராக இருந்தாலும் விலைவாசியை கட்டுப்படுத்த கவர்னர் மாளிகை வரை சென்றார். 2010-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து போரடியா வர் தலைவர் தான்  ஜெயலலிதா. தேர்தல் அறிக்கையில் இனிக்க இனிக்க கூறிவிட்டு தற்போது மக்களுக்கு கசப்பு மருந்து தந்து வருகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள். ஆனால்  இன்று மாணவர்களை ஏமாற்றி வருகிறார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எரிவாயு கேஸ் விலை 100 ரூபாய்  மானியம் என்று அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்துவிட்டு தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர். அ.தி.மு.க ஆட்சியின் போது மக்கள் யாருக்கும் அரிசி தட்டுப்பாடு வந்தததில்லை இல்லை, அ.தி.மு.க ஆட்சியில் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 100 கிலோ அரிசி வழங்கினோம். ரேஷன் அரிசி திருடுபவர்களுக்கு  தண்டனை கடுமையாக இருந்தது. அதனால் யாரும் அரிசி கடத்த முடியவில்லை. தி.மு.க ஆட்சியில் அது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அதனால் அதிக அளவில் அரிசி கடத்தல் நடைபெறுகிறது என்றார்.



திருடா திருடி படத்தில் வரும் ஆபாச திரைப்படம் போஸ்டரை பார்த்து படத்தின் போஸ்டரில் இருந்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை என்று ஒரு சிறுவன் அந்த போஸ்டரை கிழிப்பது போல் தி.மு.க தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள எந்த சலுகையும் மக்களுக்கு வரவில்லை”  எனக் கிண்டல் அடித்தார். மேலும் “அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்று” கூறினார்.