“உங்கள் ரத்தத்தில் கலந்து விட்ட உணர்வுகளின் அடிப்படையில் நீங்கள் செயல்படுவதாக இருந்தால், நீங்கள் செயல்படுவதற்கு உங்களை உந்தித் தள்ளும் ஒரு சக்தி தேவை இல்லை” என்று சொல்வார்கள். திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாள் கையெழுத்திட்ட 5 ஆணைகளை அறிந்தபோது எனக்கு  இந்த மேற்கோள் நினைவுக்கு வந்தது.


முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 100 நாட்கள் என்று நாம் பேசத் தொடங்கும்போது,  அதற்கு முன்னதாக நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்து நாம் பேச மறந்து விடக் கூடாது. அந்தத் தேர்தலின் வெற்றி இல்லாமல் இப்போது நாம் பேசும் ஆட்சியும் இல்லை. அப்போது என்ன நடந்தது? 


கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இடையிலான தேர்தல் என்றார்கள்; நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கும் பிரிவினை உணர்வு கொண்டவர்களுக்கும் இடையிலான தேர்தல் என்று சொன்னார்கள். எத்தனையோ பிரிவினைகளையும்  எத்தனையோ பிளவுகளையும் முன்நிறுத்தி ஸ்டாலினை வீழ்த்தப் பார்த்தார்கள்.  ஆனால்  பெரியார், காந்தி, மார்க்ஸ், அம்பேத்கர் என்ற அரசியல் அடையாளங்களை ஓரணியில் ஒன்றுபடுத்தி, ஆதிக்கவாதிகளை ஸ்டாலின் தோற்கடித்தார். அதிலிருந்து  ஸ்டாலினின் தலைமை குறித்து நாம் பேச வேண்டும்.  இப்போது நடைபெறும் ஆட்சி அங்கிருந்துதானே தொடங்குகிறது!


இந்த வரிகளை நான் எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம்வரை, நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சியை நல்லாட்சி என்று பாராட்டுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.  மிகப் பெரிய ஜனநாயக விபத்து ஒன்று நடந்து விடாமல் தமிழ் நாட்டைக் காப்பாற்றிய வரலாற்று நாயகனாக ஸ்டாலின் எனக்குத் தெரிகிறார்.  நல்லாட்சி என்பது என்ன?  நிதி அமைச்சர் போட்டுக் கொடுக்கும் பட்ஜெட்டின் எல்லைகளுக்குள் நின்று அதற்கு அவ்வளவு நிதி ஒதுக்கீடு, இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று எண்களைப் பற்றி பேசுவதா?  அதுவும் ஆட்சியின் ஒரு பகுதிதான், நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் நல்லாட்சிக்கான அடிப்படை, ஒருவருடைய நேர்மையான எண்ணங்களில் இருந்தும் அவருடைய விழுமியங்களில் இருந்தும் தொடங்குகிறது. 


எந்தவிதமான விழுமியங்களையும் தொலைநோக்குத் திட்டங்களையும் சமூகப் பார்வைகளையும் ஓர் அரசு கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் ஆட்சி அல்லது நிர்வாகம் நல்லதா அல்லதா என்ற முடிவுக்கு நாம் வர முடியும் என்று நான் கருதுகிறேன்.  அந்த வகையில், ஸ்டாலின் ஆட்சி எப்படிப்பட்டது என்று பார்க்கிறேன். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் காந்தியின்  சமூக நல்லிணக்கம்,  பெரியாரின் சமூகநீதி,   மார்க்சின் சமத்துவம், அம்பேத்கரின் சகோதரத்துவம்,  அண்ணாவின் ஜனநாயகம்  போன்ற விழுமியங்களே இந்த அரசின் வழிகாட்டும் நெறிகள் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இனிமேல், அந்தத் திசையில் ஆட்சி தொடர்ந்து செயல்படுகிறதா என்பதை மட்டும் நாம் பார்த்தால் போதும். நடப்பது நல்லாட்சிதான் என்ற முடிவுக்கு எளிதில் நாம் வந்து விடலாம்.


நாம் வாழும் சமூகத்தில் தலைமைப்பண்பு அல்லது தலைவரின் இலக்கணம் குறித்து சில தவறான புரிதல்கள் இருக்கின்றன. ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் அல்லது ஒரு ஆட்சியின் தலைவராக இருப்பவர் அனைத்தும் அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும் அவருடைய மூளையில் உதித்தவற்றையே அவர் ஆணைகளாக இடவேண்டும் என்றும் அவர் யாரிடமும் எதையும் கலந்தாலோசிக்க வேண்டியதில்லை என்றும் ஒரு புரிதல் இருக்கிறது. தலைவருடைய உயரம், உடற்கட்டு, மார்பளவு  போன்றவை எல்லாம் தலைமைக்கான தகுதிகளாக விளம்பரங்கள் மூலம் முன்நிறுத்தப்படுகின்றன. ”கட்சியில் அடுத்த நிலைத் தலைவர்கள் தேவை இல்லை,  ஆட்சியில் அமைச்சர்கள் இருப்பது பெயரளவுக்கு தான்,  எல்லாமே தலைவரால் தான், எல்லாம் தலைவர் செயல்” என்று சர்வாதிகாரத்தையும் எதேச்சதிகாரத்தையும் சிறந்த தலைமை குணங்களாக சிலர் கருதுகிறார்கள். அப்படியே பிரசாரமும் செய்கிறார்கள்.


ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தப் பிரச்சாரத்தைத் தூக்கி குப்பைத் தொட்டியில் எறிந்திருக்கிறார். திறமை வாய்ந்த  அதிகாரிகளை தன்னுடைய நிர்வாகத் தளபதிகளாக தேர்வு செய்திருக்கிறார். பழனிவேல் தியாகராஜன்,  மா சுப்ரமணியன், தங்கம் தென்னரசு,  சேகர்பாபு  உள்ளிட்ட செயல் வீரர்களை சவால்கள் நிறைந்த துறைகளின் அமைச்சர்கள் ஆக்கியிருக்கிறார். துரைமுருகன்,  கே என் நேரு, பொன்முடி உள்ளிட்ட பழைய அமைச்சர்களும் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 



 உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், முதல்வரின் தனிச்செயலர் - I


போருக்குப் போவதற்கு முன்னால் தனது படையணிகளை முறையாக அணிதிரட்டித் தயாராவது போல,  முதலமைச்சர் தனது ஆட்சிக்கான படையணிகளை சிறப்பானதொரு முறையில் ஒழுங்குபடுத்தி இருக்கிறார். இந்த வரிசையில் அவரது மகுடத்தில் வைரமாக பொருளாதார ஆலோசனைக் குழு அமைந்திருக்கிறது. எஸ்தர் டாப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், நாராயணன் என்ற இந்த ஆலோசனைக் குழு பன்முகத்தன்மை கொண்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு தேவைகளையும் தங்களது பார்வையில் உள்ளடக்கக் கூடியது. இந்த  ஆலோசனைக் குழுவை நியமித்த உடனேயே, இந்தியாவின் பார்வை ஸ்டாலின் நிர்வாகத் திறன் மீது விழுந்துவிட்டது.  அவர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்திய ஆலோசனையின் போது நிர்வாகம் என்பது ”எனது தனிப்பட்ட பொறுப்பல்ல; நம்முடைய கூட்டுப்பொறுப்பு” என்று சொன்னதும் ஜனநாயகத் தலைமையின் உச்சத்தை அவர் எட்டிவிட்டார்.  


முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது தமிழ்நாடு கொரோனா பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. அந்தப் பேரிடரை முதலமைச்சர் தலைமையிலான அணி,  பெரும் சவாலாக எடுத்துக் கொண்டு சிறப்பாக கையாண்டு,  நிலைமையின் தீவிரத்தை பெருமளவில் தணித்தது. இது சாதாரணமான  விஷயம் அல்ல.  சிறப்பான பாராட்டுக்குரிய சாதனை.  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும்,  இந்த குறிப்பிட்ட பணியில் அவருடைய முதன்மை தளபதிகளாக இருந்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,  செயலர் ராதாகிருஷ்ணன்  ஆகியோருக்கும் இவர்களோடு தோளோடு தோள் நின்ற அனைத்து மக்களுக்கும் எனது தலை தாழ்ந்த  வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


கொரோனா உதவித்தொகை நான்காயிரம் ரூபாய்,  பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் கட்டணமில்லாத பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எல்லோராலும் வரவேற்கப்படுகின்றன. அவை குறித்து எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்பதால் நான் எதுவும் விரிவாக சொல்லவில்லை. இங்கே சிறப்பாகக் குறிப்பிடப்படாமல் இருப்பதால், அவை சாதாரண திட்டங்கள் என்று அர்த்தமில்லை. இந்தத் திட்டங்களால் நம் சமூகத்தில் சாதாரண மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள் என்பதில் நமக்கு சந்தேகம் தேவையில்லை.


ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் பலர் தங்களுக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் ரகசியமாக தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  அப்படி இருப்பதை அதிகாரம் தங்கள் கைகளில் இருப்பதற்கான அடையாளமாக தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நல்லாட்சிக்கு அடையாளம் வெளிப்படைத்தன்மை என்பதை முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தினந்தோறும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறது.  தடுப்பூசிகள் குறித்த விவரங்களை மக்களோடு பகிர்ந்து கொள்கிறது. இந்த வெளிப்படைத் தன்மை ஜனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு.  எந்தச் சூழலிலும் இதைக் கை விட்டு விடக்கூடாது. இந்த ஆட்சிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் அழுத்தங்கள் வரலாம்.  கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத இடங்களிலிருந்து தடைகள் உருவாக்கப்படலாம்.  மாநிலங்களின் அதிகாரம் குறித்த சட்டங்கள் நிர்வாகத்தின் கைகளை கட்டிப் போடலாம். இவை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் மாநில நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்களும் எழலாம்.  இவை எதுவுமே ஆட்சியின் இன்றைய வெளிப்படைத்தன்மைக்கும் ஜனநாயகத் தன்மைக்கும் குறுக்கே நின்று விடக்கூடாது. அப்படி ஒரு சூழலுக்கு இடமளித்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்.


ஆட்சி என்பது சட்டங்களாலும் திட்டங்களாலும் மட்டுமே முழுமை அடைந்து விடுவதில்லை. ஆட்சி செய்பவர்களின் தனிப்பட்ட குணநலன்களும் அவர்கள் மக்களோடு கொண்டிருக்கும் அன்பும் உறவும் நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் இருந்தாலும், அவற்றின் நிலைமைகளை மக்களுடன் பகிர்ந்து, மக்களின் துணையோடு நிறைவேற்ற முயலும் என்று நம்புகிறேன். மாநிலத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயங்களில்  திமுக ஆட்சி நன்றாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.  மாநிலத்தின் அதிகார எல்லைக்கு வெளியில் இருக்கும் பிரச்சனைகளில் ஆட்சியின் ஒவ்வொரு நகர்வுக்கும் நிர்வாகத்தின் துணையாக மக்களும் இணைந்து நிற்க வேண்டும். ஆட்சிக்குத் தலைவர்களை தேர்வு செய்வதுடன் நமது கடமை முடிந்து விடுவதில்லை. நமது பொதுவான இலக்குகளை வெல்லும் வரை ஆட்சிக்குத் துணையாக இருப்பதும் நமது கடமை! மக்களின் பேராதரவுடன் தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் சிறந்த ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தொடர வாழ்த்துகள்!


குறிப்பு : இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளருடையதே