நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் அறிவோம் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். 5வது தொடராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து காண்போம். 


மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாய், ஒரு முறை மட்டுமே முழுமையாக ஆட்சி செய்தார், 2 முறை  பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் ஆட்சி கவிழ்ந்தது. ஒருமுறை ஆட்சி ஏற்கவும் மற்றும் கவிழவும் காரணமாக இருந்தவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இத்தொகுப்பில் வாஜ்பாயின் இளமை காலம் முதல் தேர்தல் அரசியல் தொடர்ந்து இறுதி காலம் வரையிலான தகவல்களை காணலாம்.


இளமைக் காலம்:


1924 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியரின் மகனாவார்.


கல்லூரி படிப்பில் இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றை பயின்றதோடு ,முதுகலை அரசியல் பட்டத்தையும் பெற்றார். இதையடுத்து, சுதந்திர போராட்டத்தில் நாட்டம் கொண்டு, சட்டப்படிப்பை பாதியில் கைவிட்டு பத்திரிக்கையாளராக மாறினார். ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக இயங்கிய அவர், இறுதி வரை திருமணமாகாமலேயே வாழ்ந்தார். வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றமைக்காக கைது செய்யப்பட்டு, 23 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வெளிவந்தார்.


அரசியல் ஆரம்பம்:




காந்தி படுகொலையை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, 1951 ஆம் ஆண்டு ஷியாம் பிரசாத் முகர்ஜி பாரதிய ஜன சங்கம் என்ற கட்சியை தொடங்கினார். அதில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் உள்ள பலர் சேர்ந்தனர், வாஜ்பாய் உள்பட.  1957ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் தொகுதியில்  போட்டியிட்டு முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 1977 ஆம் ஆண்டு, ஜனதா கட்சியுடன் பாரதிய ஜன சங்கமானது இணைக்கப்பட்டது.  அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. ஜனதா கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மொரார்ஜி தேசாய் பிரதமரானார். வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர், ஜனதா கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, கூட்டணியில் இருந்து விலகினார்.


பாஜக உருவாக்கம்:


1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் உருவாக்கினர். 1996 ஆம் ஆண்டு தேர்தலில் அதிக தொகுதிகள் வென்ற கட்சியாக உருவாகிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் வாஜ்பாயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனதால் பாஜகவின் ஆட்சி கவிழ்ந்தது.  


அதையடுத்து 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக, மதிமுக ,பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கினார்.  இந்த கூட்டணி வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2வது முறையாக பிரதமரானார்.


ஆட்சியை கவிழ்த்த ஜெயலலிதா


பின்னர் ஜெயலலிதா மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததையடுத்து, 1999 ஏப்ரல் 4 ஆம் தேதி குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணனிடம், பாஜகவுக்கு கொடுத்த வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தார் ஜெயலலிதா. அதையடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தப்பட்டது. அப்போது திமுக அரசு ஆதரவளித்தும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் தோற்றார்.


இதுகுறித்து வாஜ்பாய் தெரிவிக்கையில், ”13 மாதங்கள் நடைபெற்ற ஆட்சியில் , ஒவ்வொரு நாளும் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்றுதான் தூங்க செல்வேன். இன்று நான் நிம்மதியாக தூங்குவேன்” என தெரிவித்தார்.


Also Read: Power Pages-1: Annadurai: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!


முழுமையான ஆட்சி:




பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 1999ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 303 இடங்களை வென்றது. இதில் பாஜக மட்டும் 183 இடங்களை கைப்பற்றியது. மூன்றாவது முறையாக வாஜ்பாய் பிரதமராகவும், எல்.கே.அத்வானி துணை பிரதமராகவும் பதவியேற்றனர். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆண்டது.


பிறந்த இடத்தில் தோல்வி:


இவர் 9 முறை மக்களவைக்கும் 2 முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இருப்பினும் ஒரு முறை பிறந்த இடத்திலேயே தோல்வியை தழுவினார். வாஜ்பாய் 1984 ஆம் ஆண்டு தேர்தலில் பிறந்த இடமான, ஏற்கனவே வெற்றி பெற்ற இடமான குவாலியரில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளில், அப்பகுதியில் புகழ்பெற்ற மாதவ்ராவ் சிந்தியாவும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையறிந்த வாஜ்பாய் மிகவும் அதிர்ச்சியுற்றதாகவும், விரைவாக அருகே உள்ள வேறு இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய விரைந்ததாகவும், நேரம் முடிந்ததால் தாக்கல் முடியவில்லை என்றும் அரசியல் வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.


இந்நிலையில் அந்த தேர்தலில் தோல்வியை தழுவினர். இதையடுத்து, அடுத்த தேர்தலில் சொந்த இடத்தை விட்டு,மத்திய பிரதேசத்தில் உள்ள விதிஷா மற்றும் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இருப்பினும், அவர் விதிஷா எம்.பி.யாக இருந்து விலகினார் மற்றும் லக்னோ தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.  


ஓய்வு பெற்ற வாஜ்பாய்:


2004  ஆம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, 2005ல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2009 ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 11 ம் தேதி சிறுநீரக தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆகஸ்ட் 16, 2018 ம் தேதி உயிரிழந்தார். 


பாஜகவின் அடித்தளம்:




பாஜகவை உருவாக்கி, ஆட்சி அமைக்கும் அளவுக்கு மிகப் பெரும் கட்சியாக மாற்றியதில் வாஜ்பாயின் பங்கு அளப்பெரியது, பாஜகவின் அடித்தளம் என்றே சொல்லலாம். அரசியல் பிரமுகர் என்பதை கடந்து புத்தகம் வாசிக்கும் பழக்கம், இந்திய இசை, இந்திய நடனம் ஆகியவற்றை ரசிப்பதோடு சிறந்த கவிஞரும் கூட. 1992ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது. 1991-ஆம் ஆண்டு “சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது. அவருடைய பிறந்த தினமான டிசம்பர் 25 நல்லாட்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 


Also Read: Power Pages-2: Ambedkar: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?