எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். அதில் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
சவால் விட்ட ஓபிஎஸ்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டியிருந்தார். அதில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், இ.பி.எஸ். தனி கட்சி தொடங்கட்டும் என சவால் விட்டு கடுமையாக ஓ.பி.எஸ். சாடியிருந்தார். மேலும் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான், அது தான் இன்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த தீர்மானத்தை ரத்து செய்ய மனம் இருந்தால் இந்த நாடு மன்னிக்காது.
இபிஎஸ் நோட்டீஸ்:
இதையடுத்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவி அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை முறைகேடாக பயன்படுத்துவதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்திற்கு இபிஎஸ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, தகுந்த விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஓ.பி.எஸ் பதில்:
இதற்கு பதிலளித்துள்ள ஓ.பி.எஸ். அதில் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து, தன்னை தகுதி இழப்பு செய்ய அடிப்படை உறுப்பினர்களுக்கே அதிகாரம் உண்டு என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நோட்டீஸ் அனுப்பியிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
யாராலும் தடுக்க முடியாது
கட்சி வழக்கு தொடர்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள், பிரதான வழக்கின் விசாரணைக்கு பொருந்தாது. ஆகையால் கட்சி கொடி, பெயர் பயன்படுத்துவது தவறு இல்லை என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போன்று அவதூறாக பேசினால், அவதூறு வழக்கு தொடர நேரிடும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.