சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராகவும் ஜி.பாஸ்கரன் இருந்துவந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் மீது சிவகங்கை தி.மு.க நகர் செயலாளர் துரை ஆனந்த், தமிழ்நாடு முதல்வர் தனிப்பிரிவு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.



 

அதில்...,"  சிவகங்கை நகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கெளரி விநாயகர்  கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் 8 செண்ட் இடம் சிவகங்கையில் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 11 ஏக்கர் நிலத்தை  முன்னாள் அமைச்சர்  ஜி.பாஸ்கரன் மற்றும் அவரது உறவினர்கள் அபகரித்துள்ளனர். கோயிலுக்கு சொந்தமான இடம் என்று தெரிந்தும்., முன்னாள் அமைச்சர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்ட விரோதமாக இடத்தை அபகரித்து., அதில் கல்லுக்கால் ஊண்டி வேலி அமைத்து மிகப்பெரிய வணிக வளாகம் கட்டி வருகிறார்கள். மேலும், அக்கட்டிடத்திற்கு விதிமுறைகளை மீறி மின் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே,கோயில் நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீண்டும் கோயிலுக்கே உரிமையாக்கவேண்டும். அத்துடன் விதிமுறைகளை மீறி மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மற்றும் இடத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.



 

 

இந்நிலையில் சிவகங்கையில அர்ச்சகர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்....," கடந்த இரண்டு, மூன்று தினமாக சிவகங்கையில் பேச்சு அடிபடுகிறது. அதை பத்திரிக்கையிலும் பார்த்தேன் எனக்கு தனிப்பட்டு புகாரும் வந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கும் அந்த புகார் சென்றிருக்கும் என நினைக்கிறேன். சிவகங்கை கெளரி விநாயகர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் போலி பத்திரங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்துள்ளதாக அந்த புகாரில் உள்ளது. தவறு செய்பவர்கள் எந்த உயர் பதிவியில் இருந்தாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோயில் சொத்துக்களை காப்பாற்றுவது ஒவ்வொரு இந்து குடிமகனின் கடமை” என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் குறித்து தற்போது அமைச்சர் பெரியகருப்பன் மறைமுகமாக எச்சரித்துள்ளது சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



 

இது குறித்து இரத்தின் இரத்தங்கள் சிலர் தெரிவிக்கையில்...," முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பெயரை கெடுக்க வேண்டும் என அவதூறு பரப்புகின்றனர். கோயில் சொத்துக்களை அபகரித்து, மாற்றியதாக எந்த  ஆதாரமும் இல்லை. எனவே பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்ப வேண்டாம்" என்றனர்.

 



 

மேலும் இது குறித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரனிடம் பேசினோம்....," அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி நிரூபிக்கட்டும்" என்றார்.

 

முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.