மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைவர் AM.ஜூபையர் தலைமையில் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.




தமுமுக மாநில செயலாளர் I.முபாரக் , தமுமுக மாவட்ட செயலாளர் S.சாதிக்பாட்சா, மமக மாவட்ட செயலாளர் கூறைநாடு PM.பாசித் , மாவட்ட பொருளாளர் சீர்காழி A.அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் AR.முபாரக்அலி ,மாநில செயற்குழு உறுப்பினர்கள் SSA.பக்கர், MS.ஆரீப், O.ஷேக் அலாவுதீன் , PSM.புஹாரி, M.ஷேக்தாவூத் , IPP மண்டல செயலாளர் MH.ரியாஜூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


செய்தியாளர்களை சந்தித்த அப்துல் சமது எம்எல்ஏ 


கூட்டத்தை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்; சர்வ சிக்க்ஷ அபியான் திட்டத்திற்கு மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது. கடந்த மாதம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்திற்கு வர வேண்டிய இந்த நிதியை விடிவித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்த போது தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக கையெழுத்து இட்டால்தான் இந்த நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் சொல்லியிருக்கிறார். 




தேசியக் கல்விக் கொள்கை


தேசியக் கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்தன்மையை சிதைக்கக் கூடியதாக இருக்கிறது. மும்மொழி கொள்கையை புகுத்தி இந்திய திணிக்க கூடிய ஒரு திட்டமாக இந்த புதிய கல்விக் கொள்கை உள்ளது. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற திட்டத்தின் மூலம் அதிகமான மாணவர்களின் கல்வி இடைநிற்றலை செய்யக்கூடிய மோசமான கல்வித் திட்டமாக சமூகநீதியை சவக்குழியில் தள்ளும் திட்டமாக தேசியக் கல்விக் கொள்கை உள்ளதால் இதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து சட்டமன்றத்தில் அதை அறிவித்திருக்கக்கூடிய சூழ்நிலையில், நிதியை மறுப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது, ஒட்டுமொத்த இந்திய ஒற்றுமைக்கு எதிரானது. இதனை மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய அரசு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம்.




சுங்க சாவடி கட்டண உயர்வு 


தமிழகத்தில் இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 36 சுங்க சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணங்கள் உயர்த்திய நிலையில் மீண்டும் தற்போது 25 சுங்க சாவடிகளின் கட்டணங்களை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கக் கூடியது. இது தமிழகத்தில் மக்களிடையே வாகன ஓட்டிகளிடையே வழிப்பறியை திட்டமிட்டு ஒன்றிய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. மனித நேய மக்கள் கட்சி சுங்க சாவடி முற்றுகை போராட்டத்தை நடத்த இருக்கின்றோம். 


போதைப் பொருட்கள் புழக்கம் 


தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் இடையே போதைப் பழக்கம் என்பது மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகம், கல்லூரி ஒன்றில் சோதனை நடத்தப்பட்டு, கஞ்சா உட்பட போதை பொருட்கள் கைப்பற்றும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசு இரும்பு கரம் கொண்டு போதையை பரப்பக்கூடிய போதைப்பொருட்கள் விற்கக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள்களை முற்றாக நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.




தமிழக அரசின் கடந்த கால நடவடிக்கைகள் கஞ்சா வியாபாரிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தினாலும் முற்றாக ஒழிக்கப்படாதது வருந்தத்தக்கது. இது அரசு மட்டுமே முயற்சித்தாலும் நடக்க கூடியது அல்ல அனைத்து மக்களுமே போதைக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை கொண்டுவருதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். வரும் 22 -ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக 100 இடங்களில் இரு சக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


முன்னதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


தீர்மானம் 1


தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இஸ்லாமியருக்கான 3.5% இட ஒதுக்கீட்டினை ஏழு சதவீதமாக அதிகரிக்க வேண்டும்...


தீர்மானம் 2 


ஒன்றிய அரசு கொண்டுவர துடிக்கும் வக்பு வாரிய திருத்த சட்டத்தை அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து முழு மனதோடு எதிர்க்க வேண்டும்


தீர்மானம் 3


மயிலாடுதுறை மாவட்ட மருத்துவக் கல்லூரி மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவன்குடியில் விரைவில் அமைத்திட வேண்டும்...


தீர்மானம் 4


எண்ணை எரிவாயு திட்டங்களால் காவிரி படுகை அடைந்த பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ய 2021 இல் தமிழ்நாடு அரசு நியமித்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் நிறுவனர் குழு 2022 இல் ஆய்வருக்கையை சமர்ப்பித்து விட்டது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அறிக்கை வெளியிடும் வரை காவிரி படுகையில் என்னை எரிவாயு எடுப்பு தொடர்பாக எந்த செயல்பாட்டையும் நடைபெற கூடாது என்றும் டெல்டா பகுதியில் பாதுகாத்திட வேண்டும்....


தீர்மானம் 5 


மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் பாதை தடங்களும் விரைவாக அமைத்திட வேண்டும் மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில்சேவை தொடங்க வேண்டும் 


தீர்மானம் 6


விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக தஞ்சாவூர் வரையிலான இரு வழி ரயில் பாதை விரைவில் அமைத்திட வேண்டும்


தீர்மானம் 7


மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட நீடூர் ஊராட்சி மற்றும் ஆனந்த தாண்டாவபுரம் ஊராட்சிக்கு இடையிலான பாவா நகர் தார் சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போடாததை கண்டித்து விரைவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்...


தீர்மானம் 8


பாவா நகர் தார்சாலைக்கான பணிகளுக்கான நிதி தமிழ்நாடு அரசின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டும் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை இத் தீர்மானத்தின் மூலமாக வன்மையான கண்டனத்தை பதிவு செய்யப்படுகிறது. உள்ளிட்ட 8 வகை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.