தூத்துக்குடி வடக்கு மாவட்டம்  விளாத்திகுளத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் இயற்றப்பட்டது- இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் அதிமுகவை காப்பாற்ற சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர் அதிமுகவினர்.

 

அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ ஒரு பக்கம் பிரச்சினையை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதனை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்டங்கள் தோறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவுடன் பேசியவர்கள் அதிமுகவில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசி கொண்டுதான் இருக்கிறார். இந்த சூழ்நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்று அதிமுக தூத்துக்கு வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ரூபம்.கே.வேலவன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும், அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க இருப்பது வரவேற்க கூடியது, சசிகலாவுடன் பேசியவர்களை நீக்கப்படுவதற்கு கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் செய்துள்ளனர்.

 



சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



 


தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு எதிராக கச்சை கட்டும் விளாத்திகுளம் அதிமுகவினரால் தலைமை அதிருப்தி அடைந்து உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவின் அன்பு தொண்டர்கள் என்ற பெயரில் 'அதிமுகவை காப்பாற்ற அம்மாவின் வழியில் எங்கள் தியாகத்தலைவியே வாருங்கள் அதிமுகவை காப்பாற்ற’ என ராஜபாளையம் நகர் பகுதி, காந்தி சிலை ரவுண்டானா, பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சசிகலாவை வரவேற்று வால்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் அதிமுகவினர். தொடரும் குழப்பத்தால் அதிமுகவின் தொண்டர்கள் குழப்பத்தில் இருக்க சசிகலா முகாமோ அடுத்த கட்டம் செல்ல தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. தலைவலி போய் திருகுவலி வந்தது போல் அதிமுக தலைமைக்கு தென் மாவட்டம் குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது.