சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில்  தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.  இதில் திமுக கழக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துகளை தெரிவித்தார். 


அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு பாஜக, இந்து அமைப்புகள், சனாதன கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் என நாடு முழுவதும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சில மாநிலங்களில் அவர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது. விமர்சனங்களுக்கு உதயநிதியும், திமுகவைச் சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் உதயநிதியின் பேச்சை திரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக அகில இந்திய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


போலீசார் வெளியிட்ட அறிக்கை


இதுதொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “ அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு சனாதன தர்மத்தை பற்றி பேசியதாக  காணொளியினை டிவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர்  அமித் மாளவியா பதிவிட்டார். அதில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து,  சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய் செய்தியினை செப்டம்பர் 2 ஆம் தேதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


அமித் மாளவியாவின் இந்த பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் ஒருபோதும் பொதுமக்களின் இனபடுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் ஜாதி மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசி வருவதாகவும் விளக்கமளித்தார்.   உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இருபிரிவினருக்கு இடையே வன்முறையினை தூண்டும் வகையிலும், மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட பல்வேறு பிரிவினருக்கு இடையில் வெறுப்பை தூண்டும் வகையிலும், செயல்பட்டு வரும் திரு. அமித் மாளவியாவும், அவர் தலைமையில் உள்ள பா.ஜ.க. அகில இந்திய தொழில் நுட்ப அணியினரும் இந்த பொய் செய்தியினை தொடாந்து பரப்பி வருகின்றனர்.


இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சிராப்பள்ளி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு. K.A.V. தினகரன். என்பவர் செப்டம்பர் 6 ஆம் தேதி  திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில்  அமித் மாளவியா மீது   சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: TN Governor Ravi: ஆளுநர் ரவி அமைத்த தேடுதல் குழு: முட்டுக்கட்டை போடும் அமைச்சர் பொன்முடி - விதி இதுதான்!