எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்குமாறு  டெல்லி உயர் டெல்லி உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை  ரத்து செய்யுமாறு, அதிமுக உறுப்பினர் என்ற முறையில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர்  டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  ராம்குமார் ஆதித்தன் மனுவுக்கு 6 வாரத்தில் பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இபிஎஸ் பொதுச்செயலாளராக அங்கீகரிப்பு
முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் பொறுப்பேற்றனர்.


கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் தேர்வு, உள்ளிட்டவையின் போது, இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என முடிவு செய்த எடப்பாடி  பழனிசாமி, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.


இந்நிலையில் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்தார். இதில், பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலையும் நிறுத்தக் கோரி பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிலும் பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், மார்ச் 28-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.


பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருப்பதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார். இதில் 10 நாட்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், அதிமுக பொதுக்குழு மற்றும் பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதற்கான உத்தரவை  அண்மையில் இணையதளத்தில் வெளியிட்டது. இருந்தபோதிலும், இந்த உத்தரவு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க


12-hour Work Bill: 12 மணிநேர வேலை மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்..