தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டது. 


முன்னதாக கடந்த மே 1ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “ மசோதா திரும்ப பெறப்பட்டது பற்றி எம்.எல்.ஏக்களுக்கு செய்தி குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்படும். 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைத்த பின்னரும் அவதூறு பரப்பி வருகின்றனர். வட, தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த, பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரவே 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது.


விட்டுக்கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை, பெருமையாகவே கருதுகிறேன். சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் எனில் அதை திரும்ப பெறுவதும் துணிச்சல்தான். திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு ” என தெரிவித்தார்.