அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‛நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டு குறைந்ததற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தனக்கு பாஜக கூட்டணியால் ஏற்பட்ட இழப்பு குறித்தும் அவர் பேசியிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் எதிர்வினை ஆற்றப்பட்டுள்ளது. பாஜக மூத்த நிர்வாகி கே.டி.ராகவன் தனது டுவிட்டரில் சி.வி.சண்முகத்திற்கு பதிலடி தந்துள்ளார். 






 


‛உங்களால் தான்’ என்ற எண்ணம் எங்களுக்கும் உண்டு என்று பதிவிட்ட அவர், சிவி சண்முகத்தின் பேச்சு தொடர்பான நாளிதழ் செய்தியையும் அதில் பகிர்ந்துள்ளார். நேரடியாகவே, அதிமுகவால் தான் பாஜக தோற்றது என முன்னாள் அமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டி கே.டி.ராகவன் தெரிவித்துள்ள கருத்து, அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்த நிலையில், தற்போது மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்-கே.வி.ராகவனின் வார்த்தைப் போர், கூட்டணி தொடர்பான குழப்பத்தை உறுதி செய்துள்ளது. 


முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய நிகழ்ச்சியின் விபரமும், பேச்சும் இதோ:


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே குருவம்மாபேட்டை கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.கவின்  மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை ஏற்றதோடு கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்பொழுது,  நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில், மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக்கொடுத்து தி.மு.க வினர் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை எனவும் சந்தர்ப்ப சூழ்நிலை தான் திமுக ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது என தெரிவித்துள்ளார். இதோடு அதிமுக,  பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தோம். இல்லையென்றால் 3 வது முறையாக தமிழகத்தில் ஆட்சியினை அமைத்திருப்போம் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அவர்,  பாஜக வுடன் கூட்டணி அமைத்ததால் தான் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் நமக்கு கிகை்கவில்லை என தெரிவித்தார். மேலும் சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக மீது எந்த கோபமும், வருத்தமும் இல்லை. ஆனால் இவர்கள் பா.ஜ.க வின் கொள்கை ரீதியான கருத்தில் முரண்பட்டு இருந்தார்கள். இதனால் தான் அ.தி.மு.க பாஜகவுடன் வைத்த கூட்டணியால் மிகப்பெரிய இழப்பினை சந்திக்க நேரிட்டது என தெரிவித்துள்ளார்.  குறிப்பாக விழுப்புரம் தொகுதியி்ல சுமார் 20 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது. இதில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகர்ப்பகுதியில் உள்ளது. ஆனால் 300 வாக்குகள் கூட எனக்கு கிடைக்கவில்லை எனவும், 16 ஆயிரம் வாக்குகள் நகரத்தில் குறைந்திருந்தாலும் கிராமங்களில் வாக்குகளை பெற முடிந்தது என கூறிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இதே நிலை தான் தமிழகம் முழுவதும் நடந்தது என தெரிவித்துள்ளார்.