மதுரை அவனியாபுரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், " 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமை அடிப்படையில் உதவிகள் செய்த கீஸ்டா செட்டில் வால்டு உள்ளிட்டோர் பாசிசப் போக்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் மீதான இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்.



குஜராத் கலவரம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் விசாரணையை அன்றைய காங்கிரஸ் அரசு இன்றைய பிஜேபி போல செய்திருந்தால் பாஜக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. இன்றைக்கு சில விவகாரங்களில் நீதிமன்றத்தில் ஒருசாரார் ஒத்து ஊதுவது வேதனையாக உள்ளது.  உச்சநீதிமன்றம் மறுவிசாரணை கோரியதால் பாஜக நிரபராதிகள் என்றாகி விடமாட்டார்கள். குஜராத் படுகொலையின் ரத்தக் கறைகள் மோடி மற்றும் அமித் ஷா கையில் தற்போதும் உறைந்துள்ளது” என்றார்.

 


குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு.

 

பா.ஜ.க., ஆட்சி என்றால் காட்சிப்பொருள் என அர்த்தம். காட்சிப் பொருள்களாக சிலவற்றை காட்டிவிட்டு தங்கள் கொடுங்கோன்மையை காட்டுவதுதான் பாஜகவின் திட்டம். பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆக்கிவிட்டால் அவர்கள் வாழ்வியல் மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துவிட்டதாக பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வட இந்தியா மற்றும் ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மேனாமினுக்கி தனமாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நாடகத்தை காட்சியை பாஜக காட்டிக்கொண்டு உள்ளது.



அதிமுகவில் தற்போது நிலவும் பிரச்னை குறித்த கேள்விக்கு,

 

இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பாஜகவோடு கூடா நட்பு வைத்ததால் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சி தான் இத்தகைய அவல நிலைக்கு அக்கட்சியை தள்ளி விட்டதாக தெரிவித்தார்.

 

தற்போது நாட்டில் வேலையின்மை தலைவிரித்து ஆடுகிறது. லட்சக்கணக்கில் வேலையை தருவோம் 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவோம் என்ற வாக்குறுதி போலவும், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அக்னிபாத் திட்டம் என்கிற ஒன்றை கொண்டு வந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாஜகவின் வன்முறையை கட்டவிழ்த்து விட கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அக்னிபாத் திட்டம். ஜனநாயகத்தின் பெயரில் தான் சர்வாதிகாரிகள் உள்ளனர். ஹிட்லர், அண்டை நாட்டின் இலங்கை பிரதமராக இருந்த ராஜபக்சே ஆகியோர் போல சர்வாதிகாரத்துடன் செயல்படுகின்றனர்.

 

8 ஆண்டுகள் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு பிரச்னைகளை பாஜக ஆட்சியில் சந்தித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் பல்வேறு பின்னடைவுகளை திசைதிருப்ப சிறுபான்மையினர் மீது தொடர் பழிகளை பிஜேபி அரசு சுமத்தி வருகிறது. குறிப்பாக பசு பாதுகாப்பு, லவ் ஜிகாத் நபிகள் நாயகம் மீது அவதூறு என உண்மையை மறைத்து மக்களை திசை திருப்ப இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர். 2024 சர்வாதிகாரிகள் வெல்ல போவதில்லை ஜனநாயகம் வெல்லும் பாஜக நிச்சயம் வெல்ல முடியாது என பேசினார்.