மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..," அ.தி.மு.க.வின் நிரந்தர எதிரியான தி.மு.கவை எதிர்க்க ஒற்றைத்தலைமையான எடப்பாடி இருந்தால் தான் அதை செய்ய முடியும், திமுக எதிர்ப்பு என்பது அ.தி.மு.கவினரின் இரத்தத்தில் ஊறியது. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஒ.பி.எஸ்., பராசக்தி வசனத்தை தலைமாட்டில் வைத்து தூங்குவேன் என யார் மனதை குளிர்விக்கும் வகையில் பேசுகிறார். ரவீந்திரநாத் குமார் தி.மு.க., முதல்வரை சந்தித்து பேசுகிறார். இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என பேசி வந்துள்ளார், இது அ.தி.மு.கவை சோர்வடைய செய்துள்ளது.




ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சசிகலாவை சேர்க்கக்கூடாது, ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என ஒ.பி.எஸ் விடுத்த கோரிக்கையை ஈ.பி.எஸ் செய்தார், பிறகு எதற்கு டி.டி.வி.தினகரனோடு எதற்கு ஒ.பி.எஸ்., ரகசிய உறவாடுகிறார் பேசுகிறார். சந்தேகமற்ற அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும். உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சந்தேக தலைமை வேண்டாம்.

 

நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும். தொண்டர்களை ஓ.பி.எஸ் கைவிட்டு விட்டார். தொண்டர்கள் என்ற புனிதச்சுமையை சுமப்பதற்கு ஒபிஎஸ் தயாராக இல்லை, தனது குடும்பத்தின் நலன் மீது மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். ஓ.பி.எஸ்., கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து இருப்பார். 



பலமுறை பேச்சுவார்த்தைக்கு மூத்த தலைவர்கள் முயன்று இருக்கிறோம். ஆனால் ஓ.பி.எஸ் அதற்கு ஒத்துழைக்கவில்லை. நம்பியார் திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். ஆனால் உண்மையில் நல்லவர். ஆனால் ஓ.பி.எஸ் நல்லவராக இருந்தாலும் தொண்டர்களை நலனில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காவல்துறைக்கு சென்று  பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறியது அ.தி.மு.க., வரலாற்றிலேயே கிடையாது, தொண்டர்கள் உடைய மனக்குமுறல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனைவரையும் அழைக்கின்றனர். நல்ல தலைமை என்றால் தேடி வர வேண்டும் எதற்கு அழைக்க வேண்டும். அப்படி வருபவர்கள் எதற்காக வருவார்கள் என தெரியும். வழிகாட்டுதல்கள் குழுவில் ஓ.பி.எஸ் தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பதவி வாங்கி கொடுத்தவர். ஆனால் உண்மையாக உழைப்பவர்களுக்கு கொடுக்கவில்லை. ஓ.பி.எஸ்க்கு மன உறுதி என்பதே இல்லை, அதனால் மன உறுதியோடு இருக்கும் ஈபிஎஸ் தான் தலைமைக்கு சரியான நபர் தொண்டர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பார். தலைமை என்றால் உறுதியோடு அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும் அது ஈ.பி.எஸ்., தான்.



ஈ.பி.எஸ்., ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அ.தி.மு.கவை எதிர்த்த எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ் உருவாகுவார், தென்மாவட்டத்தில் ஓபிஎஸ் இடத்தை பிடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இருவரும் காட்டுகின்ற வழியில் தற்போதும் நான் பயணிக்கிறேன் என்றார்.