புதுச்சேரியில் பாமக ஆட்சிக்கு வந்த பிறகு சாராயத்தை ஒழிக்க முதல் கையெழுத்து  போடலாம் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால், ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் புதுச்சேரியில் மதுவை ஒழித்து விடலாம் என்று பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதுச்சேரி பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் 7  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அதில் புதுச்சேரியில் கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. மேலும் மாதம் ஒரு முறை கஞ்சாவுக்கு எதிராக பாமக சார்பில் போராட்டம் நடத்த வேண்டும். போராட்டத்திற்கு வேண்டுமானால் அழையுங்கள் வருகிறேன் என்று கூறிய அவர் புதுச்சேரியில் பாமக ஆட்சிக்கு வந்த பிறகு சராயத்தை ஒழிக்க முதல் கையெழுத்து போடலாம் என்று தெரிவித்தார். மேலும்  அன்புமணி அமைச்சராக இருந்த போது  ஜிப்மர் முன்னேற்றம் அடைந்தது. பெரிய கொள்கை உடைய கட்சி ஜிப்மரை பாம்பு விழுங்குவது  போல சித்தரித்தனர் அவர்களுக்கு அறிவு இல்லையா என கேட்ட அவர், நாடு குட்டிச்சுவராக சென்று கொண்டிருக்கிறது என்று வேதனைப்பட்டார்.




மேலும் பட்டாளி மக்கள் கட்சி என்றால் வேற மாதிரி பார்க்கிறார்கள். பாமக கொள்கை உடைய கட்சி, ஜாதி,மதம் பார்த்ததில்லை. மக்களுக்கு வேண்டுகோள், மது வேண்டும் என மக்கள் சொல்வீர்களா?? மது ஒழிப்பை கொண்டு வரும் பாமகவிற்கு வாக்கு அளியுங்கள், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் மதுவை ஒழித்து விடலாம் என்று தெரிவித்தார்.பாமக யோசிக்காமல் நல்லது செய்யும், 30 தொகுதிகளிலும் பாமக போட்டியிடம் நகரப் பகுதியில் உள்ள வணிகர்கள் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் இளைஞர் சக்தி அளவிட முடியாத சக்தி என்று கூறிய அவர் 100 க்கும் 40% விழுக்காடு இளைஞர் சக்தி உள்ளது.


சேலம் ஜோசியர் சொன்ன பத்து-ஒன்று... என்ன ?


புதுச்சேரியில் நமது ஆட்சி வர எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று புதுச்சேரி பாமக நிர்வாகிகள் என்னைச் சந்தித்து கேட்டனர். அப்போது அவர்களிடம் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஜோசியர்‌ பற்றிக் கூறி அவரை சந்திக்கும் படி இவர்களிடத்தில் கூறினேன். அவர்களும் அந்த பெரிய ஜோசியரைச் சென்று பார்த்தனர். அப்போது உடனே பத்து, ஒன்று என்று சொல்லி அனுப்பிவிட்டார். வெளியே வந்த அவர்கள் நீங்கள் சொன்ன ஜோசியர் எதுவும் கேட்காமல் பத்து, ஒன்று என்று கூறி அனுப்பிவிட்டார் எங்களுக்குப் புரியவில்லை என்று என்னிடம் கூறினர்.


அப்போது நான் புரிந்துகொண்டேன், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் ஒரு ஆட்சி, பிறகு 1 எம்பி என்று சரியாக தான் ஜோசியம் சொல்லி அனுப்பியுள்ளார். அதை நோக்கி நீங்கள் பாடுபடுங்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் நான் சொன்னேன். 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும், புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2, வந்தாலே போதும் சுலபமாக வரலாம். ஜோசியர் சொன்ன மாதிரி சுலபமான வழியில், சரியான வழியில் இவர்களை அழைத்துச் சொல்லப்போகிறேன். அதற்கான பயிற்சியை தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் அரசியல் பயிலகத்தில் கொடுக்கப் போகிறேன் என்றார் ராமதாஸ்.