மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பால அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற்ற ஆடல்பாடலுன் கூடிய குத்துப்பாட்டு நிகழ்ச்சியை பார்த்து ஆவேசமடைந்த சமூக ஆர்வலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்ருத் பாரத் ரயில் நிலையம்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 58 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அம்ருத் பாரத் ரயில் நிலையதிட்டத்தின் இரண்டாம் கட்டமாக 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 553 நிலையங்களை 19,000 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். 




இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 33 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 1,500 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 21,520 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 41,000 கோடி ரூபாய் மதிப்பில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 



இந்நிலையில் மயிலாடுதுறை அருகே மயிலாடுதுறை பிரதான ரயில்வே இருப்புப் பாதையில் நீடூர் மற்றும் மாப்படுகை ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பல கட்ட போராட்டங்களையும் நடத்தினர் . இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் ஒரு பகுதியாக நீடூர் மற்றும் மாப்படுகை பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தலா 32 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. 




இந்த சூழலில்  அடிக்கல் நாட்டும் விழாவின் துவக்கத்தில் கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்  என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஆனால், கலாச்சார கலை நிகழ்சி என கூறி சினிமா குத்துப் பாடல்களுடன் ஆடல் பாடல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் மிகவும் கோபமும், வருத்தமும், ஆவேசமும் அடைந்து  நேராக மேடைக்குச் சென்று உடனடியாக ஆடல் பாடலை நிறுத்துமாறும், அரசு விழாவிற்கு ஏற்ற பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும் கூறி தடுத்து நிறுத்தினார். விழாவிற்கு வந்திருந்த அத்தனை பேரும் இந்நிகழ்ச்சிகளை பார்த்து மனம் நொந்து  பாதிக்கப்பட்டு அமர்ந்திருந்த நிலையில், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி நிறுத்தியதை அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்பட அனைவரும் பாராட்டினார்கள். மேலும் தேசியகீதம் பாடப்படாமல் இவ்விழா நடைபெற்றது மிகவும் வருத்தமளிப்பதாகவும், எதிர்காலத்தில் குறைகள் இன்றி விழாக்களை நடத்திட திட்டமிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


IND vs ENG: தொடரை வென்ற இந்தியா...சொந்த மண்ணில் படைத்த வரலாற்று சாதனை! வீரர்கள் புகழாரம்!