மயிலாடுதுறை புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ம் தேதி திறந்துவைக்க உள்ளார். மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் போராட்டம் மற்றும் கால்நூற்றாண்டு கனவாக இருந்த தனிமாவட்டம் கோரிக்கையை 2020 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று மார்ச் மாதம் 2020 -ஆம் ஆண்டு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அதே ஆண்டு ஜூலை 15 -ஆம் தேதி நியமிக்கப்பட்டனர்.

 



 

பின்னர், 2020 டிசம்பர் 28ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட லலிதா ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். அதனை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர், மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து அங்கு தற்காலிக ஆட்சியர் அலுவலமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலுவலகம், கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு  114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.

 



 

இந்நிலையில் 7 மாடி கொண்ட பிரம்மாண்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா காணொலிகாட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு தீவிரம் காட்டியுள்ளது.  இந்த சூழலில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன்  நேரில் சென்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார்.

 


 



 

மேலும் முடிவுற்ற பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. தொடர்ந்து அக்கூட்டத்தில் ஆட்சியர் அலுவலக திறப்பு விழா குறித்து கலந்தாலசிக்கப்பட்டது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற மார்ச் 4 -ஆம் தேதி ஆட்சியர் அலுவலக திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இன்னும் தேதி உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மயிலாடுதுறை மாவட்டம் மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.