மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தைக் கடத்தி வந்த காரைக்காலைச் சேர்ந்த நபரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து 2,016 பாண்டி மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Continues below advertisement

தீவிரமடையும் போதைப்பொருள் தடுப்பு வேட்டை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா உத்தரவின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பகுதியாக, மாவட்டம் முழுவதும் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிரடிச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

தென்னலக்குடி பாலம் அருகே விடிய விடிய அதிரடி சோதனை

இந்நிலையில், சீர்காழி காவல் சரகத்திற்குட்பட்ட தென்னலக்குடி பாலம் பகுதியில் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் தீவிரக் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையின் போது, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் (46), த/பெ. கலைசெல்வன்,  திருவேட்டங்குடி, காரைக்கால் என்பவர் சட்டவிரோதமாகப் புதுச்சேரி மாநில மது வகைகளைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Continues below advertisement

பெருமளவிலான மது மற்றும் வாகனங்கள் பறிமுதல்

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்காக இந்த மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கைதான ரகுராமனிடமிருந்து 2,016 பாண்டி மதுபாட்டில்கள், 110 லிட்டர் பாண்டி சாராயம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் (கார்கள்) பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து, ரகுராமன் மீது சீர்காழி மதுவிலக்கு காவல் நிலையத்தில் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலுக்கு (சிறையில்) அடைக்கப்பட்டார்.

எஸ்பி கடும் எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கு கோரிக்கை

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுத்துள்ளார் அதில் "மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக மது, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

"மேலும், போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக மயிலாடுதுறையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டுள்ளார். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களைத் தமிழக அரசின் DRUG FREE TN செயலி (App) மூலமாக உடனடியாகப் புகாராகத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்கும் பொதுமக்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் காவலத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.