மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது ஆண் குழந்தையை சுவற்றில் தள்ளி படுகொலை செய்துவிட்டு, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடிய தாயையும் அவரது கள்ளக்காதலனையும் செம்பனார்கோவில் காவல் துறையினர் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
சம்பவம் பின்னணி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கனிவண்ணன் (31) என்பவருக்கும், கவிப்பிரியா (25) என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதிலும் 3 வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தன. திருமணத்திற்கு முன்பே கவிப்பிரியாவுக்கு அரிவேளூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. தனியார் நுண்கடன் நிறுவனத்தில் பணிபுரிந்த அபினேஷுடன் கவிப்பிரியாவுக்குத் திருமணத்திற்குப் பிறகும் தொடர்பு நீடித்து, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
பாத்ரூமில் விழுந்ததாக நாடகம்
மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு, கவிப்பிரியா குழந்தைகளுடன் ஆக்கூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கு அபினேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி, 3 வயது இளைய மகனை பலத்த காயங்களுடன் கவிப்பிரியா மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். குழந்தை பாத்ரூமில் விளையாடியபோது வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி ஜூன் 29-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது.
சிசிடிவி ஆதாரம் & கொடூரக் கொலை அம்பலம்
குழந்தையின் மரணத்தில் சந்தேகமடைந்த தந்தை கனிவண்ணன் அளித்த புகாரின் பேரில், செம்பனார்கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று தான் ஊரிலேயே இல்லை என அபினேஷ் சாதிக்க முயன்ற நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அபினேஷ் வீட்டிற்குள் சென்று வந்த காட்சிகள் சிக்கின. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டனர்.
கொலைக்கான காரணம்
தாய் தண்ணீர் பிடிக்க வெளியே சென்றபோது குழந்தை தொடர்ந்து அழுது அடம் பிடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ் குழந்தையை கீழே தள்ளியதில், சுவற்றில் தலை மோதி உள்காயம் ஏற்பட்டு குழந்தை மயங்கியுள்ளது. பின்னர் பழியை மறைக்க இருவருமாகச் சேர்ந்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடியது அம்பலமானது.
குண்டர் சட்டத்தில் அதிரடி நடவடிக்கை
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட எதிரிகள் அபினேஷ் மற்றும் கவிப்பிரியா ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, 24.07.2026 அன்று அபினேஷ் கடலூர் மத்திய சிறையிலும், கவிப்பிரியா திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையிலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
