சீர்காழி அடுத்த காரைமேடு பகுதியில் குளத்தில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர்  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


குளத்தில் குளித்த பள்ளி மாணவர்கள் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த டி.மணல்மேடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 9 வயதான மாவீரன் மற்றும் சக்தி. நண்பர்களான இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் மாவீரன் மற்றும் சக்தி ஆகிய இருவரும் பக்கத்து கிராமமான காரைமேடு கிராமத்தில் உள்ள சுக்கான் குளத்தில் காலை 10 மணி அளவில் சக நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து குளிக்க சென்றுள்ளனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வெடி விபத்து - ஒருவர் உயிரிழந்த சோகம்




நீரில் மூழ்கி மாயமான சிறுவர்கள் 


அப்போது குளத்தின் கரையில் உள்ள ஆலமரத்தின் விழுதுகளில் தொங்கி கொண்டு குளித்து விளையாடி உள்ளனர். அப்போது 5 பேர் கரை ஏறிய நிலையில் 2 சிறுவர்களை மட்டும் கரை ஏறவில்லை. தொடர்ந்து இரண்டு பேரும் கரை ஏறாததால், அச்சமடைந்த மற்ற சிறுவர்கள் குளத்தின் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குளத்திற்கு வந்து தண்ணீரில் இறங்கி தேடிப் பார்த்துள்ளனர்.


சீர்காழி அருகே சோகம்.. பேருந்து மோதி 3 இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு





மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 


மேலும், சீர்காழி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்து அவர்களும் விரைந்து வந்து குளத்தில் சுமார் 4 மணி நேரம் தேடி, குளத்தில் சேற்றில் சிக்கி இருந்த மாவீரன் மற்றும் சக்தி ஆகிய இரண்டு சிறுவர்களின்  உடலை மீட்டனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் இருவர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிக வட்டி வசூல்... கதறிய குடும்பம்... கரூரில் திமுக பிரமுகர் கைது