சீர்காழி அருகே மசாலா பொருட்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
மசாலா ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூர் என்ற இடத்தில் செல்லும் 4 வழிச்சாலையில் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த மசாலா கம்பெனி ஒன்றில் இருந்து மசாலா பொருட்களை கடைகளுக்கு வினியோகம் செய்யும் கன்டெய்னர் லாரி ஆனது சிதம்பரத்தில் மசாலா பொருட்களை இறக்கி விட்டு, மயிலாடுதுறை செல்லும் வழியில் அரசூர் நான்கு வழிச்சாலையில் வந்துள்ளது.
நான்கு வழிச்சாலையில் விபத்து
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையோர வாய்க்காலில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் கன்டெய்னர் லாரி ஆனது தீ பற்றி மள மள வென எரிந்ததுள்ளது. இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
சிறு காயங்களுடன் தப்பிய ஓட்டுநர்
கன்டெய்னர் லாரி ஓட்டுநர் பாலசுப்ரமணியன் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்து குறித்து ஆனைகாரசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையில் கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.