மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில், தவில் ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் இசைப்பள்ளி வளாகத்தின் முன்பாக  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

Continues below advertisement

வளாகத்தை உலுக்கிய இடமாற்ற உத்தரவு

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சீர்காழியில் அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தவில், நாதஸ்வரம், குரலிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளைக் பயின்று வருகின்றனர். இந்த இசைப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தவில் ஆசிரியராக ஹரிஹரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களிடம் மிகுந்த அன்புடனும், அர்ப்பணிப்புடனும் தவில் கலையைச் சிறப்பாகக் கற்றுக்கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர் ஹரிஹரனை பெரம்பலூர் மாவட்டத்திற்கு திடீரென இடமாற்றம் செய்து கலை பண்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்: திடீர் தர்ணா போராட்டம்

வழக்கம்போல் வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள், தங்களுக்குப் பாடம் கற்பித்த தவில் ஆசிரியர் ஹரிஹரன் பெரம்பலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட செய்தி அறிந்து கடும் அதிர்ச்சியடைந்தனர். தங்களின் கலைப் பயணத்திற்கு அடித்தளமாக விளங்கிய ஆசிரியர் மாற்றப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள் அனைவரும் இசைப்பள்ளியின் முதன்மை நுழைவாயில் முன்பாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் குதித்தனர். "எங்கள் ஆசிரியர் எங்களுக்கு வேண்டும்!", "இடமாற்ற உத்தரவை உடனே ரத்து செய்!" என முழக்கங்களை எழுப்பியவாறு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Continues below advertisement

பெற்றோர்கள் ஆதரவு: வலுத்த போராட்டம்

மாணவர்கள் தன்னிச்சையாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, அவர்களின் பெற்றோர்களும் பெருந்திரளாக இசைப்பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்தனர். மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பெற்றோர்களும் தர்ணா போராட்டத்தில் களமிறங்கியதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஒருவர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறுகையில்: "ஏழை எளிய மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல், இலவசமாகக் கலைகளைக் கற்றுத் தரும் இந்த அரசு இசைப்பள்ளியில், அர்ப்பணிப்போடு சொல்லித் தரும் ஆசிரியர்களை இப்படி திடீரென இடமாற்றம் செய்வது முறையல்ல. இது மாணவர்களின் கலைப் பயணத்தையும், அவர்களின் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கும். பாதியிலேயே கலைக் கல்வியை நிறுத்த வேண்டிய சூழ்நிலையை இந்த இடமாற்றம் ஏற்படுத்தும்," என்று வேதனை தெரிவித்தார்.

தலைமை ஆசிரியர் சமாதானப் பேச்சுவார்த்தை

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் போராட்டத்தால் இசைப்பள்ளி வளாகமே ஸ்தம்பித்தது. சூழலின் தீவிரத்தை உணர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர், உடனடியாகப் போராட்ட களத்திற்கு வந்து மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். துறை ரீதியான இடமாற்றங்கள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இருப்பினும், தலைமை ஆசிரியரின் சமாதானத்தை ஏற்க மறுத்த மாணவர்கள், தவில் ஆசிரியர் ஹரிஹரனை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தும் வரை தங்களின் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனப் பிடிவாதமாகக் கூறி தர்ணாவை தொடர்ந்தனர்.

துறை அதிகாரிகள் தலையிடக் கோரிக்கை

வழக்கமாக அமைதியாகக் காணப்படும் சீர்காழி அரசு இசைப்பள்ளி வளாகம்,  மாணவர்களின் கோஷங்களாலும் பெற்றோர்களின் வேதனைக் குரல்களாலும் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. கலை பண்பாட்டுத் துறையின் உயர் அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தவில் ஆசிரியரின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.