சீர்காழி அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது சமையலர் வெந்நீர் ஊற்றியதால் படுகாயம் அடைந்த மாணவன் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


சத்துணவு திட்டம் 


தமிழ்நாடில் 1962-ம் ஆண்டு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டமானது 1982-ம் ஆண்டு சத்துணவு திட்டம் மேம்படுத்தப்பட்டது. அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளும் முறையாக பள்ளி செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்குவதை உறுதி செய்யவும், இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்து மிகுந்த சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.




சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பல லட்ச மாணவர்கள் 


இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான 20 லட்சத்து 74 ஆயிரத்து 39 மாணவர்களும், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த 21 லட்சத்து 97 ஆயிரத்து 914 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது, சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவர்களுக்கு, சத்துணவு மையங்கள் மூலம் 5 வகையான கலவை சாதங்களுடன் மசாலா முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது, மாணவர்களுக்கு பிடித்த உணவாகவும் மாறி உள்ளது.




சிரமத்தில் சமையலர்கள்


இருப்பினும், சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு, சத்துணவு தயாரிப்பின்போது, முட்டையை உரிக்க பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, அதிகளவு மாணவர்களை கொண்ட சத்துணவு மையங்களை சேர்ந்த பணியாளர்கள் முட்டை உரித்தலில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அதிகளவு பயனாளிகளை கொண்ட சத்துணவு மையங்களுக்கு முட்டை உரிப்பதற்கான நவீன எந்திரம் கொள்முதல் செய்ய சமூக நலன் துறை திட்டமிட்டுள்ளது.





முட்டை உரிக்கும் நவீன எந்திரம்


தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 மாணவர்களுக்கு மேல் உள்ளனர். இந்த மையங்களை சேர்ந்த பணியாளர்கள் தினமும் 500 முட்டைகளுக்கு மேல் வேக வைத்து அவற்றை உரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள். சில நேரங்களில், மாணவர்களுக்கான முட்டைகள் உடைந்து வீணாகி விடுகின்றன. மேலும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதன்காரணமாக, அதிக அளவு பயனாளிகளை கொண்ட 431 பள்ளி சத்துணவு மையங்களுக்கு நவீன முட்டை உரிக்கும் எந்திரம் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.


 


இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து எந்திரம் கொள்முதல் செய்வதற்கான அனுமதி கோரி தமிழக அரசிடம் சமூக நலத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில், இதற்கான அனுமதி கிடைத்துவிடும். அதன்பிறகு, டெண்டர் விடப்பட்டு, முட்டை உரிக்கும் எந்திரம் சத்துணவு மையங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்த எந்திரம் பயன்பாட்டு வந்தால், சத்துணவு பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.




திருக்கருக்காவூர் அரசு பள்ளி 


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருக்காவூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8 வயதான சுபஷன் ஜோஷிவா என்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்லையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு வந்த மாணவன் சமையல் அறைக்கும் முன்பு விளையாடி உள்ளான். அப்பொழுது சமையலர் சுதா முட்டை அவிப்பதற்கு பயன்படுத்திய வெந்நீரை எடுத்து வெளியே ஊற்றியுள்ளார். அப்பொழுது குறுக்கே வந்த மாணவன் மீது வெண்ணீர் பட்டு படுகாயம் அடைந்துள்ளான். அதனை அடுத்து படுகாயம் அடைந்த மாணவனை பள்ளி ஆசிரியர்கள் அழைத்துக்கொண்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். 




மேல் சிகிச்சைக்காக அனுமதி


அங்கு மருத்துவமனையில் மாணவனுக்கு முதல் உதவி அளித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு மாணவன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சீர்காழி காவல்நிலையத்தில் மாணவனின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெந்நீரை ஊற்றிய சமையலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நிவாரணம் வழங்குமாறு மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக துறைசார்ந்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.