திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழாவை முன்னிட்டு  தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, ரிஷபக் கொடியானது ஏற்றப்பட்டது. 


திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது. 




மார்க்கண்டேயர் உயிரை காப்பாற்றி சிவபெருமான் 


புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்கை பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 




மேலும் பல சிறப்புகள் 


அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். 




ஆடிப்பூரம் 


இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அபிராமி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு முன்பு விநாயகர், அபிராமி அம்பாள், சண்டிகேஸ்வரர் பல்லக்கில் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில்  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத  கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிம்ம லக்னத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது.  


வேண்டியதை அப்படியே அருளும் ஆடிக்கிருத்திகை: தஞ்சை மாவட்ட முருகன் கோயிலில்களில் குவிந்த பக்தர்கள்




தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் ஸ்ரீ அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சி நடைபெறும். 9-ம் நாள் திருவிழாவாக வரும் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி திருத்தேர் உற்சவமும், 7-ம் தேதி 10-ஆம்நாள் திருவிழாவாக தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை  தருமபுரம் ஆதீன கோயில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி திருக்கடையூர் கோயில் உள்துறை விருதகிரி ஆகியோர் தலைமையிலானோர் செய்திருந்தனர்.