தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகரில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


அதிகாலை முதல் திரளான பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டனர். மேலும் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.


முருகனை வழிபட அனைத்தும் அருள்வார்


ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது நம் முன்னோர்களின் வாக்கு. குழந்தை வரம் வேண்டும், வாழ்க்கையில் வெற்றி வேண்டும் என்பவர்கள் ஆடிக்கிருத்திகையின் விரதம் இருந்து முருகனையும், அம்பிகையையும் வழிபடலாம். அன்றைய தினம் முருகப் பெருமானை கோவிலுக்கு சென்று தரிசிப்பதும், பாலால் அவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதும் மிகவும் ஏற்றதாகும். 


ஆடி மாதத்தில் பெண் தெய்வங்கள் தவிர மற்ற தெய்வ வழிபாடு சிறப்பித்து சொல்லப்படாது. ஆனால் இந்த மாதத்தில் அம்மன் வழிபாட்டிற்கு இணையான பெருமையை தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய ஆடிக்கிருத்திகை பெறும். முருகப் பெருமான், சிவன் மற்றும் பார்வதி தேவி இணைந்த வடிவமாக கருதப்படுவதால் தான் அவருக்கு இந்த சிறப்பு.


சக்தியின் அம்சமாகவும் கருதப்படும் முருகன்


முருகப் பெருமான், சிவ பெருமானின் ஐந்து திருமுகங்களுடன், ஆறாவதாக நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். அதனால் அவர் சிவனின் அம்சமாகவும், பராசக்தியின் மொத்த சக்தியையும் உள்ளடக்கிய வடிவமான வேலினை கையில் தாங்கி இருப்பதால் அவர் சக்தியின் அம்சமாகவும் கருதப்படுகிறார். மலை மேல் இருப்பதால் திருமாலின் அம்சமாகவும், பிரணவத்திற்கு பொருள் சொல்லி ஈசனுக்கே பாடம் நடத்தியதால் விநாயகரின் வடிவமாகவும் விளங்குவதால் தான் முருகப் பெருமானை வணங்கினால் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலனை பெற முடியும் என கூறப்படுகிறது.


ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை சிறப்பானது


சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்கள் முருகனுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுவார்கள் என்றும், அந்த நாளில் கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் வழிபடப்படுவார்கள் என்றும், கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்றும் சிவ பெருமான் வரம் அளித்தார். அவர் அளித்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமாக கருதப்பட்டு, அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். அதுவே அம்பிகைக்குரிய ஆடி மாதத்தில் வரும் போது கூடுதல் சிறப்புடையாக கருதப்படுகிறது.


தஞ்சை மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் நகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்னைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.


கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிக்கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது உண்டு.


தஞ்சை அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்


ஆடிக்கிருத்திகையை ஒட்டி தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேலஅலங்கம் முருகன் கோயில், வடக்கு அலங்கம் முருகன் கோயில், குறிச்சித் தெரு முருகன் கோயில், ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில், சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில், பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன.


சுவாமிமலை கோயிலில் சிறப்பு அபிஷேகம்


அதிகாலை கோயில்களில் நடை திறக்கப்பட்டு முருக பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை முதல் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இதேபோல் மெலட்டூர் சுவாமிநாதசுவாமி கோயிலில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் காலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர்.