மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அழிந்து வரும் பழவகை மூலிகை மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் ஐந்து வகையான அரிய மரக்கன்றுகளை சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.


யார் இந்த ஏபிஜே அப்துல் கலாம்? 


தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான  இராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15 -ம் தேதி ஜைனுலாபுதீன் - ஆஷியம்மா தம்பதியினருக்கு 5-வது மகனாகப் பிறந்தவர் இந்த அப்துல் கலாம். ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏபிஜே  ஆகும். மீனவ தொழில் புரிந்த குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதில் வறுமையில் வளர்ந்தவர், சிவசுப்ரமணியம் என்ற ஆசிரியரின் உதவியோடு மேல்நிலை கல்வியினை தொடர்ந்தார்.  1955-ல் சென்னை எம்.ஜ.ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பு படித்து முடித்தார். இவருக்கு விமானியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது, அதற்காக நடத்தப்பட்ட தேர்வில் இவர் 9-வது இடத்தையும் பிடித்தார். ஆனால் அப்துல் கலாமுக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 1960-ல் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வானூர்தி அபிவிருத்தி அமைப்பில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார்.




பின்னர் இஸ்ரோவில் இணைந்து செயல்பட துவங்கினார். செயற்கை கோளான எஸ்.எஸ்.வி 3 ஏவுவதில் முக்கிய பங்காற்றினார். இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூசன் விருதை அப்துல் கலாமுக்கு 1981-ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1963 தொடக்கம் முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1999 -ல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்த அவர், அக்னி பிரித்வி ஆகாஷ் எனப்படும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.  2002-ம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர் ஆனார். 2007ஆம் ஆண்டு அவரது பதவிக் காலம் முடிந்தது மீண்டும் இந்திய நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயன்றார். எனினும் பல்வேறு காரணங்களால் அந்த போட்டியில் இருந்து விலகினார். ஏவுகணை நாயகன், கனவு நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அப்துல் கலாம் உலகெங்கிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கங்களால் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் ஆவர்.




சரிந்த அப்துல் கலாம்


இறுதியாக மேகாலயாவின் ஷில்லாங்கில் 2015 -ம் ஆண்டு, ஜூலை 27 -ம் தேதி ஐஐஎம் மேடையில் பேச சென்றபோது அப்துல் கலாம் சரிந்தார். அதன்பின், மருத்துவமனையில் இரவு 7:45 மணிக்கு அவரது உயிர் மாரடைப்பால் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பல முக்கியத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.


ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள்  அனுசரிப்பு


டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மறைந்த எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சேத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று அப்துல் கலாமின் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜோதி பவுண்டேசன் சார்பில் அழிந்து வரும் அரியவகை மரம் மற்றும்  செடிகளை பாதுகாக்கும் வகையில் அரிய வகை செடிகள் மற்றும் பழவகை கொண்ட மரங்களான கொடுக்காப்பள்ளி, பொன்னை மரம், நிலவேம்பு உள்ளிட்ட ஐந்து வகை மரங்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.




மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக பேசிய மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேனா பென்சில், சில்வர் வாட்டர் கேன் மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.