மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக கணவனை மனைவி கல்லால் அடித்ததோடு, அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 





திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை (51) இவருடைய மனைவி அன்னலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பகுதி செயலாளராக களப்பணியாற்றி வந்துள்ளார்.



இந்நிலையில் சர்க்கரைக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நேற்று இரவு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் சக்கரை தலையில் மனைவி அன்னலட்சுமி கல்லை போட்டும், உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தார். தகவல் அறிந்த திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்கரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி அன்னலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.