தென் மாவட்டங்களுக்கு இரண்டு வந்தே பாரத் ரயில்கள்


சென்னை - நாகர்கோயில் மற்றும் மதுரை - பெங்களூர் இடையே நாளை (ஆகஸ்ட் 31) வந்தே பாரத் ரயில் சேவை துவங்க இருக்கிறது. இந்த இரண்டு ரயில் சேவைகளையும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி  வைக்க இருக்கிறார்.


எழும்பூர் -  நாகர்கோவில்


சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் துவக்க நாள் சிறப்பு ரயில் சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி,  ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் மற்றும் சென்னை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதன்படி சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627) சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர்  வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


மதுரை - பெங்களூர் (கண்டோன்மென்ட்)


அதேபோல மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் துவக்க நாள் சிறப்பு ரயில் மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, தமிழக அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்டம்பர் 2 முதல் துவங்க இருக்கிறது


செப்டம்பர் 2 வழக்கமாகிறது


மதுரை - பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671) செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்று சேரும். மறு மார்க்கத்தில் பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672) பெங்களூரு கண்டோன்மெண்டில் இருந்து மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம்,  கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில்  நின்று செல்லும்.


சிறப்பு வரவேற்பு


இந்த துவக்க நாள் சிறப்பு  ரயில்கள் நிற்கும் ரயில் நிலையங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பயணியர் சங்கத்தினர், மாணவர்கள், முக்கிய பிரமுகர் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். முக்கிய பிரமுகர்கள், சில மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு இந்த துவக்க நாள் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஓசூர் டாடா நிறுவனத்தில் உத்தரகாண்ட் பெண்களுக்கு வேலை; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு- ராமதாஸ் கண்டனம்