துணை முதல்வராக பதவியேற்று முதல்முறையாக மதுரை வரும் உதயநிதி ஸ்டாலின் வருகையால், மதுரை களைகட்டும் என கட்சி வட்டாரங்கள் பேசிகொள்கின்றனர்.


 

மதுரை வரும் துணை முதல்வர்

 

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தி.மு.க.வினர் மட்டுமின்றி பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி நான்கு வருடங்களுக்குள் அமைச்சர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றதற்கு பலரும் வாழ்த்துகள் கூறினாலும், எதிர்க்கட்சிகள் பலர் விமர்சித்தும் வருகின்றனர். தி.மு.க.வில் பல ஆண்டுகளாக உழைத்து மு.க.ஸ்டாலின் அடைந்த இடத்தை உதயநிதி ஸ்டாலின் நான்கு ஆண்டுகளுக்குள் அடைந்து விட்டார் என்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதை விமர்சித்து வருகின்றனர். அதே போல் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் தற்போதைய பேசு பொருளாக இருக்கிறது. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை மதுரை வருகிறார். தொடர்ந்து நாளை மதுரை, விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

 







துணை முதலமைச்சராகி முதல் முறையாக மதுரை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு மதுரை மாவட்ட திமுக சார்பில் மதுரை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். மதுரை மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி, மு.மணிமாறன் அறிக்கையில்...,” கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு துணை முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக இன்று 30ஆம் தேதி மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதையொட்டி, மதுரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. இதனை கழகத்தினரும், பொதுமக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று இரவு 7.15 மணியளவில் விமான மூலம் மதுரை வருகிறார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக சார்பில் அனைவரும் ஒன்று திரண்டு முரசு கொட்டு முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளது. எனவே கழகத்தினர் திரளாக பங்கேற்று, கையில் இரு வண்ண கொடியேந்தி வரலாறு காணாத வகையில் பிரமாண்ட வரவேற்பு கொடுத்திட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 







அழகிரி இல்லம் செல்கிறாரா?

 

துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, மதுரை எப்போதும் ஸ்பெசல் தான். அவர் மதுரையை செண்டிமெண்டாகவும் நினைக்கிறார். மதுரையில் தி.மு.க., நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி அரசியலில் விஸ்வரூப பயணத்தை துவங்கினார். இயக்குநர் சங்கர் படம் போல பிரமாண்டத்தை அமைச்சர் மூர்த்தி நிகழ்த்தி அமர்களப்படுத்துவார் என்றும் பேசுவார். அதனால் மதுரையில் உற்சாக வரவேற்பை எதிர்நோக்குவார். தொடர்ந்து ரத்த உறவும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மு.க.அழகிரியின் இல்லத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அமைச்சராக பதவியேற்ற போது அழகிரி இல்லம் சென்று வந்தார், என்பது குறிப்பிடதக்கது. துணை முதல்வராக பதவியேற்று முதல்முறையாக மதுரை வரும் உதயநிதி ஸ்டாலின் வருகையால் மதுரை களைகட்டும் என கட்சி வட்டாரங்கள் பேசிகொள்கின்றனர்.