ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல். ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பிரச்னைகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.


 

பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

 





ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் ஆதரித்தது குறித்த கேள்விக்கு

 

கலைஞர் எப்போது ஆதரித்தார், எடப்பாடி பழனிசாமி முதலில் எதிர்த்தார் அதற்கு என்ன சொல்வது. பேட்டி கூட கொடுக்காமல் வெறும் கடிதம் மூலமாக எதிர்ப்பை தெரிவித்தார். அதை கொண்டு வந்து என்ன சாதிக்கப் போகிறார்கள். சமீபத்தில் தான் கர்நாடகாவில் தேர்தல் முடிந்தது. ஆட்சிகள் கவிழாதா. இது போன்ற நிறைய கேள்விகள் உள்ளது. ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒவ்வொரு நாளைக்கு, ஒவ்வொரு பிரச்னையை கிளப்பி விடுகிறார்கள். 

 

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது சரி என்றால் பாரத பெயர் மாற்றம் சரி என்ற கேள்விக்கு:

 

இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்று மோடி சொன்னார் அது போல மாற்றிவிட்டார் வாழ்த்துக்கள். 



 

சனாதனம் சர்ச்சை குறித்த கேள்விக்கு:

 

கொள்கைக்காக உருவாக்கப்பட்டது தான் திமுக. ஆட்சி அதற்கு அடுத்தது தான். அதைவிட முக்கியம் சமூக நீதி. எனவே அது தொடர்பாக தொடர்ந்து பேசுவேன். அண்ணா, பெரியார், அம்பேத்கர், திருமாவளவன், ஆ.ராசா யாரும் பேசாததை நான் பேசவில்லை. அதைவிட முக்கியம் 2024 தேர்தலில் பாசிச பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. சர்ச்சுகள் இடிக்கப்பட்டுள்ளது. முதலில் அதைப் பற்றி பேசுவோம். அதன் பிறகு சனாதனத்தை பற்றி பேசுவோம். சனாதனத்தை பற்றி தற்போது நான் பேசவில்லை, ஒழிப்பு மாநாட்டில் தான் நான் பேசினேன்.