கிராமங்களில் பொதுவாக வீட்டில் வளர்க்கும் கால்நடைகள், செல்லப் பிராணிகளை வெறும் உயிரினமாக மட்டும் பார்க்காமல், தங்களது வீட்டின் உறுப்பினராக நினைப்பார்கள். அதுபோல செல்லமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ரேஷன் கார்டில் மட்டும்தான் பெயர் இருக்காது. மற்றபடி, அவை வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினராகவே மற்றவர்களுடன் வாழ்ந்துவரும். தங்களுக்கு பிடித்தமான பெயர் வைத்து வாடா, போடா என்று உரிமையாக பேசுவார்கள். இந்நிலையில் தான் வளர்த்த நாய் தொலைந்த சோகத்தில் அதனை கண்டுபிடித்துத்தரும் நபர்களுக்கு ஐந்தாயிரம் சன்மானம் அறிவித்துள்ளார் சிவகங்கை விவசாயி ஒருவர்.

 



 

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட  மதகுபட்டி பகுதியில் உள்கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் வைரவன். இவர் ஒரு  ஜல்லிக்கட்டு ஆர்வலர். பாரம்பரியமாக இவரது குடும்பத்தினர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகின்றனர். இவரது காளை வெள்ளையன் தென் மாவட்ட ஜல்லிக்கட்டு  போட்டிகளில் பெயர்போன காளையாகும். மதகுபட்டி வெள்ளையன் என்று சொன்னால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் தெரியும். இப்படி காளை வளர்ப்பதில் ஆர்வம் உடைய இவர் வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பதிலும் பஞ்சமில்லை. ஆடு, மாடு கோழி என விவசாய உப தொழில்களையும் செய்து வருகிறார்.

 



 

இந்நிலையில் வைரவன் தற்போது புதிதாக கமுதியில் இருந்து வாங்கி வந்த நாய்க்குட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனால் கவலை அடைந்த வைரவன் காணாமல்போன, தனது வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஐந்தாயிரம் சன்மானம் வழங்கப்படும் என மதகுபட்டி, கல்லல், பாகனேரி, சொக்கநாதபுரம், ஆலவேளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் போஸ்டர் அடித்து ஒட்டினார். இதனால் நாய்க்குட்டியை தேடும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர் நாயைக் கண்டுபிடிக்க போய்டர் ஒட்டிய சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 




 

இது குறித்து வைரவன் பேசியபோது, “எங்க குடும்பம் விவசாய குடும்பம். சம்சாரிகளோட்ட நாங்களும்  தக்கா, புக்கானு விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கோ. ஆடு, மாடுகள வளர்க்கிறது கண்டிப்பு. அதுக காசு பணத்துக்கு மட்டுமில்ல மனசுக்கும் அதுக தான் ஒதவி. எங்க வீட்டாளுக்கும் அதுக தான் உசுரு. இப்படி  இருக்கையில புதுசா ஒரு நாக்குட்டி ஒன்னு கமுதில  இருந்து வாங்கியாந்தோம். வாங்குன மூணு நாள வீட்டுலதான் கட்டி கிடந்துச்சு. சரி வெளிய கூட்டிபோவும்னு வாக்கிங் கூட்டி போனேன். அதுவாட்டுக்க ஓட்டம் எடுத்துருச்சு. சரி வந்துரும்னுதான் நினைச்சேன். ஆனா இன்ன வரைக்கும் வரல. நாய காணோம்னு போஸ்டர் ஒட்டிருக்கோம். நாய கண்டுபிடிச்சு குடுக்குறவுகளுக்கு கண்டிப்பா சன்மானம் உண்டு. நாய் நிச்சயம் கிடைக்கும்கிற நம்பிக்க இருக்கு" என்றார்.