விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாருகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 'ஜான் பாண்டியன்'. இவரது மனைவி கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்தது, தொடர்பாக இவர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜான்பாண்டியன் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.






 

இதற்கு இருக்கன்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர் அன்பரசன், தலைமை காவலர் ஆறுமுகவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கைதி ஜான்பாண்டியனை அழைத்துச் சென்ற காவலர் அன்பரசன் மற்றும் அறுமுகவேல் ஆகிய இருவருக்கும் டீ, சமோசா சாப்பிட வேண்டும் என தோன்றியிருக்கிறது.

 

இந்நிலையில் கைதியின் உறவினரும், காவலர்களுக்கு நன்கு தெரிந்தவருமான மாடேஸ்வரன் என்பவரிடம் துப்பாக்கியை கொடுத்துவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர். துப்பாக்கியை வாங்கிய மாடேஸ்வரன் டீக்குடிக்கும் கேப்பில் ஒரு போட்டோ சூட்டையே எடுத்து முடித்துள்ளார்.



மேலும் மாடேஸ்வரன் தான் கம்பீரமாக துப்பாக்கியுடன் போட்டோ எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இது குறித்து  விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியவர உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில் இது குறித்த காவல்துறையினர் விசாரணையில் காவலர் அன்பரசன், ஆறுமுகவேல் ஆகியோர் அஜாக்கரதையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன், காவலர் அன்பரசன் மற்றும் ஆறுமுகவேல் ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிலர், ”காவலர்கள் அன்பரசன் மற்றும் ஆறுமுகவேல் ஆகியோர் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். சம்மந்தப்பட்டவர் துப்பாக்கியை வைத்து யாரையாவது திட்டமிட்டு சுட்டிருந்தால் என்ன நடந்துருக்கும் என்பது தெரியவில்லை. சிலர் மனநிலையை பொருத்து பிரச்னைகள் பெரிதாயிருக்கும். எனவே இவ்வளவு அலட்சியமாக நடந்துகொண்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.