மதுரை திருப்பரங்குன்றம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பரங்குன்றம்  எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேசும்போது, ஒரு வலிமையான திறமையான தலைமை உருவாக்கப்பட்டு, வருகின்ற ஜூலை 11ஆம் தேதி ஒற்றைத் தலைவராக பொறுப்பேற்கும் சூழல் உள்ளது. தி.மு.க.,விற்கு சாதகமாக  சிந்துபாடுபவர்கள் அ.தி.மு.க., தலைமை பதவியை ஏற்க தகுதியற்றவர்கள். ஓ.பி.எஸ் மீது நாங்கள் பற்றும் அன்பும் கொண்டவர்கள். நேற்று ஓ.பி எஸ் மதுரை முதல் தேனி வரையில் மேற்கொண்ட பயணம் வெற்றிப் பயணமாக கருத முடியாது. ஓ.பி.எஸ் சுய நலத்துடன்  செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ் தனது தொகுதி தவிர மற்ற எந்த கட்சியினருக்கும் தேர்தல் பிரச்சாரம்  செய்யவில்லை இல்லை. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸூக்கு ஆதரவு இருப்பதாக மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது.



 

ஜெயலலிதா ஓ.பி.எஸ்-ஐ உண்மை தொண்டன் என்று பாராட்டியதாக கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதா மேடையில் பாராட்டினால் சில காரணம் இருக்கும். ஓ.பி.எஸ்.,ஐ கட்சியை விட்டு சிலகாலம் ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா என்னிடம் எடப்பாடி பழனிசாமியை அடையாளம் காட்டினார். நான் அதை பொது வெளியில்  கூறியது இல்லை. அவரின் நம்பிக்கைக்குரியவராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். அதிமுகவின்  95% கட்சித் தொண்டர்கள், தலைமை குழு உறுப்பினர்கள்,  நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள்  இ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஓ.பி.எஸ், ஜானகி அம்மா போன்று எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுக்க வெண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இ.பி எஸ் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். ஓ.பி எஸ் வெறும் 10 ஆயிரம் வாக்குகளை  மட்டுமே பெற்றுள்ளார்.



பன்னீர்செல்வம் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி இருக்கிறார். பன்னீர்செல்வத்திற்கு கட்சியின் பொதுக் குழு கூட்டதில் எந்த அவமரியாதையும் செய்யப்படவில்லை. பொதுக் குழுவை நடக்கக்கூடாது என்று நினைப்பவர் எப்படி கட்சித் தலைவராக வர முடியும். இரண்டாம் கட்டத் தலைவர்கள் நீதிமன்றம் செல்லலாம். ஆனால் தலைவராக வர வேண்டுமென நினைப்பவர் எப்படி செல்வார்.  தென்மாவட்டத்தில்  ஓ.பி எஸ் மட்டும் அதிமுகவின் தலைவர் இல்லை.  திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பெரிய புல்லான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இருக்கின்றனர். என்வென்று தெரியாமல் பல கோப்பில் கையெழுத்து போட்டதாக சொல்லும்  ஓ.பி. எஸ் எப்படி  முதல்வராக இருந்தார். எப்படி கட்சியின் தலைவராக இருக்க முடியும்.  வினை விதைத்தவன் வினை அறுப்பான், கத்தி எடுத்தவன் கத்தியால் மடிவான். அவர் எடுத்த ஆயுதம் அவரை வீழ்த்தி உள்ளது.



 

யார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்? 

 

கட்சியை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல முடியாதவர் எப்படி ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியும்.  ஒருங்கிணைப்பு, தகுதி, திறமையற்றவராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஒற்றை தலைமை விவகாரம் குறித்து  இனி ஓ.பி.எஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை இல்லை. அது கட்சியின் வேகத்துக்கு வேகத்தடையாக நிற்கிறது. பேசினாலும் கட்சியில் பதவி பெறும் விஷயங்களை பற்றிதான் பேசுவார்கள். வருகின்ற ஆண்டுகளில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். தென் மாவட்டங்களில் ஜாதி, மத மற்ற கட்சியாக அதிமுக இருக்கிறது. சிலர் வேண்டுமென்றே சாதி அடிப்படையில் இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்றார்.