அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

நாகர்கோவிலை சேர்ந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு..,”கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக தன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. இந்த வழக்குகளால் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் வழக்குகள் திரும்ப பெறப்படவில்லை. 

 


 

எனக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த நிலையில் கடந்த ஆண்டு ஒரு வருடத்திற்கு பயன்படுத்தும் வகையில்  தற்காலிக பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. ஒரு வருட பாஸ்போர்ட் வழங்கினால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும் வகையில் பத்தாண்டு காலத்திற்கு செல்லும்படியாகும் பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பம் செய்திருந்தேன். இந்நிலையில் என் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணமாக கூறுவதோடு, பயங்கரவாத செயல்களில் தொடர்பு இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.  எனக்கு சாதாரண குடிமகனுக்கு உள்ள அடிப்படை உரிமையில் ஒன்றான பாஸ்போர்ட்டை முடக்குவது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே எனக்கு  பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.



 

 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடியதற்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல வழக்குகள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி,  மனுதாரர் ஒரு சமூக ஆர்வலர், அணு உலைக்கு எதிராக போராடுபவர். எனவே மனுதாரருக்கு 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.