சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரைக்கு பதில் பிரசாதமாக பரோட்டா விநியோகம் செய்யப்படுவது தமிழ் நாட்டிலேயே இங்குதான் முதன்முறையாக இருக்கும் போல, என கொடை விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

 

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆவணி, புரட்டாசி கொடைவிழா

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் தான் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாத கடைசி மற்றும் புரட்டாசி முதல் வாரத்தில் கொடைவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொடைவிழா கடந்த 13 -ம் தேதி தொடங்கியது. அன்று காலை கணபதி ஹோமம், கோமாதா பூஜையும் நடந்தது. சனிக்கிழமை மாலை சிறுமிகள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி, ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில்1503 திருவிளக்கு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண் குளிர பார்த்தி சாமி தரிசனம் செய்தனர்.

 


 

மனம் உருக சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

 

செவ்வாய்க்கிழமை காலை 1008 மஞ்சள் கலந்த பால்குட  அபிஷேகம், மதியம் சிறப்பு அபிஷேகம் உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. அன்று இரவு 207  முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு படையல்களுடன் சாம பூஜை நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீபத்தி ரகாளி அம்மன்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொடை விழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரைக்கு பதில், பிரசாதமாக பரோட்டா விநியோகம் செய்யப்பட்டது

 

தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என பிரசாதம் வழங்கப்பட்டுவது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக கொடைவிழா நிறைவு நாளன்று பிரசாதமாக புரோட்டா மற்றும் சன்னா மசாலா வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு பரோட்டாவை வாங்கி ருசித்து சாப்பிட்டனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரைக்கு பதில் பிரசாதமாக பரோட்டா விநியோகம் செய்யப்படுவது, தமிழ் நாட்டிலேயே இங்குதான் முதன்முறையாக இருக்கும் போல, என கொடை விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் தெரிவித்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததும் குறிப்பிடதக்கது.