காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில் பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெண் காவலர்களால் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.


 


சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் கைது

 

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

இதனிடையே தேனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தார். அப்போது அவரை  கைது செய்ய வந்த கோவை போலீசாருக்கு உதவியாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியம் என்பவர் உடன் சென்றுள்ளார்.

 

இதையடுத்து பெண் என்றும் பாராமல், சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதோடு கீழே தள்ளியுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோருக்கு கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் விசாரணை

 

கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் முன் சவுக்கு சங்கர் ஏற்கனவே கடந்த 8-ம் தேதி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இந்நிலையில் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேனி மாவட்ட PC பட்டி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி செங்கமலச் செல்வன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

 







2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

 

அப்போது சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டார். காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில் பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெண் காவலர்களால் சவுக்கு சங்கர் அழைத்துசெல்லப்பட்டார்.