கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரையில் 521 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 

இந்தநிலையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 205 பேரின் குடும்பத்துக்கு கடந்த 3 நாட்களில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகா வாரியாக தேனியில் 48 பேருக்கும், போடியில் 36 பேருக்கும், ஆண்டிப்பட்டியில் 48 பேருக்கும், பெரியகுளத்தில் 24 பேருக்கும், உத்தமபாளையத்தில் 49 பேருக்கும் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிவாரண உதவியை பெற தமிழக அரசின் www.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் இறப்புச் சான்றிதழ், கொரோனாவால் இறப்பு என்ற சான்று, வாரிசு சான்று, ஆதார் எண், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தவுடன் அவர்களின் பெயர், விவரங்கள் இணைய வழியில் பதிவு செய்யப்படும். பின்னர், அவற்றை பரிசீலனை செய்து அரசு நிவாரணம் வழங்கப்படும்.



 

கொரோனா பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்ற நிலையிலோ, சிகிச்சை பெற்று வீடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையிலோ உயிரிழந்த நபர்களிடம் கொரோனாவால் இறப்பு என்ற சான்றிதழ் இல்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கலாம். அதுபோல், கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கூறப்பட்ட நிலையில், சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களும் ஆட்சியரிடத்தில் மனு அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 




 


 

 

அவ்வாறு அளிக்கப்படும் மனுக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உள்ள, கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்பை உறுதி செய்யும் குழுவால் பரிசீலனை செய்யப்படும். இந்த குழுவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

இந்த குழுவினர் உரிய விசாரணை செய்து கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தால் அதை உறுதி செய்த பின்பு, இறப்புக்கான காரணம் குறித்த சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை கொண்டும் இணையவழியில் விண்ணப்பித்து நிவாரண உதவி பெறலாம்.  எனவும் தேனி மாவட்ட ஆட்சி தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


ட்விட்டர் பக்கத்தில் தொடர