பல்வேறு விடயங்கள் போராட்டங்கள் மூலம் தான் தீர்வு காணப்படுகிறது. சிலரது வாழ்க்கையே போராட்டமாக தான் உள்ளது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு விசயத்திலும் ஓங்கி பேசி வருபவருக்கு மட்டும் தான் ஆங்காங்கே நீதி கிடைக்கிறது. இந்நிலையில்  தனது மகளுக்கு ஒரு வங்கி கணக்கு துவங்குவதற்கு கூட தாய் ஒருவர் போராட்டம் நடத்தியது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 



சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் போதுராஜா, கீதா தம்பதியினர். இவர்களுக்கு சந்தான லெட்சுமி என்ற மகள் உள்ளார். சிறுமி சந்தான லெட்சுமி சிலுக்கப்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். (MBC) என்று சொல்லப்படும் மிகவும் பிற்பட்டோருக்கான உதவித்தொகை பெற வங்கிக்கணக்கு தொடங்கி ஜூலை 29-க்குள் விண்ணப்பிக்க பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தாக சொல்லப்படுகிறது. இதனால் இது, குறித்து புதிய வங்கிக் கணக்கு துவங்க, ஒரு வாரமாக தனது தாயார் வங்கி கணக்கு வைத்துள்ள காளையார்கோவில் இந்தியன் வங்கிக்கு சந்தானலட்சுமி தினமும் அலைந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அலைக் கழிப்பு செய்ததைத் தவிர வங்கிக் கணக்கை துவங்கிக் கொடுக்கவில்லை.



இந்நிலையில் நேற்று தனது அம்மாவுடன் வந்த மாணவி சந்தான லெட்சும், வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். அதற்கு வங்கி அதிகாரிகள், விண்ணப்பத்தைத் தந்துவிட்டுப் போங்கள். ஒரு வாரம் கழித்து வங்கிப் புத்தகம் தருகிறோம் என்றனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவியும், அவரது தாயாரும் வங்கி முன்பு சுமார் 5 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். அவரது தாயார் வங்கி அதிகாரி களிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து தாயின் முயற்சியால் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் உடனடியாக வங்கிக் கணக்கு தொடங்கி கொடுத்தனர். ஒருவழியாக மாணவி சந்தான லெட்சுமி வங்கி பாஸ் புக்குடன் வீடு திரும்பினார். ஒரு புறாவுக்கு போரா என்பது போல ஒரு வங்கிக் கணக்கு துவங்க கூட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என மாணவியின் தாயார் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.




”பல்வேறு அரசு வங்கிகளில் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியாக பேசுவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. படிக்காத ஏழை, எளிய மக்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் அதிகாரிகள், அலட்சியத்தோடு வேலை செய்யும் நபர்கள் முறையற்று பணி செய்யும் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் போது இது போன்ற விசயங்கள் தவிர்கப்படும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.