ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அரசு நில ஆவணங்கள் முற்றிலும் சேதம் - போலீசார் விசாரணை. 

 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் செயல்பட்டுவரும் நில அளவை துறையின் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் முழுவதும் தீயில் பரவி எரிய துவங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த எஸ்.எல்.ஆர் ஆவணம் முற்றிலும் தீயில் சேதமடைந்தது.  இது குறித்து தகவல் அறிந்த  காவலர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.



அதன் பின்பு ராமநாதபுரம் தீயணைப்பு துறையினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற அரசு அலுவலகங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீழ்த்தளத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கல்வித்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆவணங்களும் தீயில் கருகி எரிந்து சேதமானது ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதியில் நீதிமன்றம் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு இதுபோன்ற விபத்துகள் தொடர் நிகழ்வாக உள்ளது.



 

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!

பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது உடனடியாக இப்பகுதியில் முக்கிய ஆவணங்கள் இருக்கும் அலுவலகங்களுக்கு முறையான பாதுகாவலர்கள் அல்லது காவல்துறையினர் நியமிக்க வேண்டும் என அரசு துறை சார்ந்த அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சமூக விரோதிகள் திட்டமிட்டு தீ வைத்தார்களா அல்லது மின்கசிவால் என்பது பற்றி காவல்துறையினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்....,” அரசு முக்கிய அலுவலகங்களில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே இங்கு தீ விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வெண்டும். இது போன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருந்தால் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்றனர். தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் எந்த எந்த ஆவணங்கள் சேதமடைந்துள்ளது என முதற்கட்டமாக ஆவணம் செய்ய வேண்டும் என்றனர்.