சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாதுரை ஆகிய நான்கு சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன.  நடந்து முடிந்த  தேர்தலில் காரைக்குடியை காங்கிரஸ் வேட்பாளரும், திருப்பத்தூர், மானாமதுரையை தி.மு.க வேட்பாளரும், சிவகங்கையை  அ.தி.மு.க வேட்பாளரும் கைப்பற்றினர். இதனால் அ.தி.மு.க கூட்டணியில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி வலுவிழந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு தேர்தலில் எம்.எல்.ஏ சீட் தரவில்லை என விரக்தியில் உள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்களும் சோர்ந்து உள்ளனர். அமைச்சர் ஆசையில் சிவகங்கையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செந்தில்நாதனும் பெரிய அளவு செயல்படமுடியவில்லை. இதனால் உற்சாகம் இழந்த அ.தி.மு.க மற்றும் பாஜக தொண்டர்கள் திமுக பக்கம் குதிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் சிவகங்கை ஒன்றிய வார்டுகளில் கவுன்சிலர்கள் திமுகவுக்கு குதித்துவிடலாம் என ஆசையில் இருந்தநிலையில் ஒன்றிய தலைவரே தி.மு.க பக்கம் சாய்ந்தார். இதனால், சிவகங்கை தி.மு.க ஒன்றியம் அ.தி.மு.க கைவசம் போயுள்ளது.



சிவகங்கை ஒன்றியத்தை பொருத்தவரை 18 வார்டுகள் உள்ளன. இந்த பதினெட்டில் அ.தி.மு.கவில் 8 நபர்களும் பாஜக, தேமுதிகவில் தலா ஒவ்வொரு வரும் என  10 கவுன்சிலர்கள் அதிமுக பக்கம் ஆதரவாக இருந்தனர். இதனால் அ.தி.மு.கவைச் சேர்ந்த மஞ்சுளா பாலச்சந்தர் தலைவராகவும், கேசவன்  து.தலைவராகவும் பொறுப்பேற்றனர். தி மு.க தரப்பில் தி.மு.கவில் 6 நபர்களும் காங்கிரஸில் ஒருவருமென மொத்தம் 7 கவுன்சிலர்கள் இருந்தனர். மேலும் அமமுக கவுன்சிலரும் தி.மு.க ஆதரவாக இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமமுக கவுன்சிலர் பத்மாவதி தி.மு.கவில் இணைந்தார். இதனால் தி.மு.க பலம் எட்டானது. மேலும் அ.தி.மு.கவைச் சேர்ந்த சிலரும் தி.மு.கவிற்கு ஆதரவு தர  தயாராக இருந்தனர். இதனால் இந்த சமயத்தில் பதவி போனால் வராது, பொழுது போனாலும் கிடைக்காது என வடிவேலு பாணியில் ஒன்றியத் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தனது ஆதரவு கவுன்சிலர்கள் அ.தி.மு.கவைச் சேர்ந்த வேல்முருகன், லட்சுமி சரவணன், தே.மு.திகவைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய மூன்று கவுன்சிலர்களுடன்  அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.



இதனால் தி.மு.கவின் பலம் 12-ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை ஒன்றியத்தில் உதயசூரியன் உதித்து, உடன்பிறப்புகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அ.தி.மு.கவிற்கு 6 பேர் ஆதரவு மட்டுமே உள்ளதால், துணைத் தலைவர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அ.தி.மு.க மற்றும் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் கவுன்சிலர்களும் திமுகவுக்கு வந்தது அவர்களை கலக்கமடைய செய்துள்ளது.