தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015- ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்குறிய இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, தற்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது வரை பல்வேறு இடியப்ப சிக்கல்கள் நிலவி வருகின்றன. தற்போது வரை முழுமையான பணிகள் தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை துவங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

 





 



 

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை பணம் வருவது தாமதமாகும் நிலையில், மத்திய அரசு தன் பங்கீடான ரூபாய் 400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை, பழங்காநத்தம் பகுதியில்  தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.  மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, எம்.எல்.,ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், மற்றும். காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள்  கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, கூட்டணி கட்சியினர் கையில் செங்கல் ஒன்றை வைத்தபடி 'எய்ம்ஸ் எங்கே?' என்று முழக்கமிட்டனர்.