அதிமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் அருகே தின்பண்டங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது போதைப் பொருள்கள் தான் கிடைக்கிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 


மதுரை கே.புதூர் பகுதியில் அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கே.வி.வே கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

 

அ.தி.முக. தலைவர்கள் செய்தது சாதனை


இந்தியாவில் புதிய திட்டங்களை கொடுத்து உலக சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். சத்துணவு திட்டத்தின் மூலமாக உலகமே வியக்கும் அளவிற்கு உயர் நிலைக்கு சென்றவர் புரட்சித்தலைவர். தொட்டில் குழந்தைகள் திட்டம் மூலமாக ஏழை குழந்தைகளை காப்பாற்றும் விதமாக தமிழகத்தில் சிசு இறக்கக் கூடாது என்ற அடிப்படையில் இத்திட்டத்தை கொடுத்து தாயாக இருந்தார்.  பெண்கள் பிரச்னையை சரி செய்வதற்காக பெண் காவலர்கள் மூலமாக மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார். இதனை அண்டை நாடான பாகிஸ்தான் நாடு பாராட்டியது. அவர்களின் வழியில் எடப்பாடியாரும் செயல்பட்டு வந்தார்.

 

பெண்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்


 

ஆனால் தற்போது தி.மு.க., அ.தி.மு.க-வின் பல நல்ல திட்டங்களை மூடு விழா செய்துவிட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் தற்போது கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. தி.மு.க காலத்தில் மாணவ செல்வங்கள் பெண்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் அருகே தின்பண்டங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது போதைப் பொருள்கள் தான் கிடைக்கிறது.

 

ஈ.டி ரெய்டு நான் காரணம்.


 

தி.மு.க ஆட்சியில் என்ன செய்தீர்கள். மதுரையில் இரண்டு அமைச்சர்களிலிருந்து எதுவுமே செய்யவில்லை. சோற்றில் அடித்த பின்டம் போல் இருக்கின்றனர். நன்கு வசூல் மட்டும் செய்கின்றனர். நினைத்தபடி எதுவுமே செய்யவில்லை. தி.மு.க வந்ததிலிருந்து மதுரைக்கு கலைஞர் நூலகம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம் இதற்கு இரண்டு மட்டும்தான்.  வேற எதையுமே தி.மு.க அரசு செய்யவில்லை. வீடுகளுக்கு இனி எதுவும் கிடைக்குதோ இல்லையோ, ஆனால் வீடு வீட்டுக்கு இனி போதைப் பொருள் கிடைக்கும். திமுக ஆட்சி தொடர்ந்தால் whatsapp மற்றும் கொரியரில் போதைப் பொருள் வாங்க முடியும். ஒரு மணி நேரமா? ரெண்டு மணி நேரத்துக்கு போதை வேண்டுமா? என்று நிர்ணயித்து போதை வழங்குவார்கள். அந்த அளவிற்கு வந்துவிடும். சனாதானம் பேசிய உதயநிதி ஸ்டாலின் தற்போது சனாதனத்தை கூப்பிட்டு விழா நடத்தி, நாணயம் வெளியிட வைக்கிறீர்கள். மத்திய அரசை கூப்பிட்டு விழா நடத்துகின்றனர். மத்திய அரசை கூப்பிட்டு விழா நடத்த என்ன காரணம் ஈ.டி ரெய்டு நான் காரணம். மத்திய அரசிடம் இருந்து தப்பிக்க தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கின்றனர்.  நீங்கள் யோக்கியமா திராவிட மாடலின் தலைவனா?  மக்களை ஏமாற்றி ஆட்சி அமர்ந்துள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.