ஜாதி பார்த்து தான் தெருக்களில் அனுமதிப்பார்கள்

 

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை எல்லீஸ் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு செல்லூர் ராஜூ பேசும் போது....,” ஒரு சாமானியனும் நாட்டை ஆள முடியும் என்பதற்கு பேரறிஞர் அண்ணா தான் காரணம். ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு என்ற பாட்டை எங்காவது கேட்கிறீர்களா? இதை கேட்டால் பெண்கள் எல்லாம் விளக்கமாறை எடுக்கிறார்கள். ஆட்சியா நடக்குது கம்பெனி தான் நடக்குது. திமுக கட்சிக் காரர்களே அந்த பாட்டை போடுவது இல்லை. முன்பெல்லாம் அக்ரகாரம் பகுதிகளில் யாரும் செல்ல முடியாது. அப்படியே சென்றாலும் செருப்பை கையில் எடுத்து தான் செல்ல வேண்டும். ஜாதி பார்த்து தான் தெருக்களில்  அனுமதிப்பார்கள். இதையெல்லாம் மாற்றியவர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் பேரறிஞர் அண்ணா தான்.

 


மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் தனது குடும்பத்தோடு அமெரிக்கா சென்றார்.


 

தொட்டால் தீட்டு பட்டால் பாட்டு என்பதை மாற்றியவர் பெரியார். அவரோடு கைகோர்த்து இருந்தவர் எம்.ஜி.ஆர்., மாதம் ஆனால் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்று, தி.மு.க சொன்னார்கள். அதை செய்தார்களா? தகுதியானவர்கள் பாதி, பேருக்கு கூட மகளிர் உரிமைத்தொகை கொடுக்கவில்லை.  எம்ஜிஆர் காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் ஏழை மக்களை சார்ந்ததாக இருக்கும். ஒரே கையெழுத்தில் 22,000 ரேஷன் கடைகளை கொண்டு வந்தவர் எம்.ஜிஆர். தி.மு.க ஆறு முறை ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மக்கள் சொல்லும்படி ஏதாவது ஒரு திட்டம் சொல்ல முடியுமா?. இணையத்தில் என்னை தெர்மாகோல் என்று சொல்கிறார்கள். அதிகாரிகள் சொன்னதை தான் செய்தேன். தெர்மாகோல் விஞ்ஞானி நிப்பாட்டுங்கப்பா என்கின்றனர். உதயநிதி என்ன தியாகம் செய்தார். ஜெயிலுக்கு போனாரா?. நயன்தாரா உடன் ஆடியவர் உதயநிதி. ஓசியில் பேருந்தில் பயணிக்கிறீர்கள் என்று திமுக அமைச்சர் பேசினார். அவர்களது குடும்பமே காரில் சொகுசாக போகிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் தனது குடும்பத்தோடு அமெரிக்கா சென்றார்.

 

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும்

 

இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். ஸ்டாலின் கூட சிறை சென்றுள்ளார், ஆனால் உதயநிதி நயன்தாராவுடன் ஆடியவருக்கு அடிச்சது ஜாக்பாட். திமுக வாயிலேயே அல்வா கொடுப்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்றார். ஆனால் கொடுக்காமல் ஏமாற்றினார். 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் திமுக ஆட்சியில் மின் தடை அதிகரித்து இருந்தது. குடும்ப ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இனிமேல் கலைஞர் கருணாநிதி குடும்பத்தில் வாரிசு அரசியல் இருக்க கூடாது, என்றால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும்” என்றார்.